Monday, March 9, 2015

Deer & Muruga

Courtesy:Smt.Uma Balasubramanian


இருமான் தழுவிய திருமார்பன்

View this email in your browser
சிவபுரந்தனில் வாழ் குரு நாயகன்
இருமான் தழுவிய திருமார்பன்

இருமான் தழுவிய திருமார்பன்
உமா பாலசுப்ரமணியன்

"வேடர் மானுக்கும் உயர் தேவயானைக்கும் இசை வேலர் தாளைத் தொழுதுயர்ந்த வாழ்க்கையினான இருநாயகி கணவன், ஆரவார உம்பர் கும்ப வாரணாசலம் பொருந்து மானையாளு நின்ற, குன்ற மறமானும் இருபாலு முற வீற்றிருக்கிறான்.

மிருக வகைகளில் விசாலமான இரு விழிகள் கொண்டு, கோழைத்தனத்தை வெளியிடுவதாகவும், அழகானதுமாக மான் அமைந்துள்ளது. கொம்புகளைக் கொண்டிருக்கும் ஆண் மானை 'கலைமான்' என்றும், சிறிய கொம்புகளோ அல்லது அவை இல்லாமலோ இருக்கும் பெண் மானுக்கு 'பிணை' என்றும் பெயர் வழங்கும். மானின் குட்டிக்கு 'மான் மறி' என்று பெயர்.

மான்களுக்கு உரித்தான மருளும் தன்மையுடைய .பார்வையினால், பெண்களை 'மானினேர் விழிமாதர்'' என்பர். இதன் உடலிலுள்ள பு:ள்ளிகள் இதன் அழகை மிகுதிப்படுத்தும். மான் கொம்பை, அலங்காரத்திற்கும், மருந்துக்கும் பயன்படுத்தும் வழக்கம் வெகுகாலமாக இருந்து வந்தன. மான்கள் எப்போதும் துள்ளி ஓடும் தன்மை படைத்தது. அதனால் தானோ என்னவோ இத்துள்ளல் கவிகளின் உவமைக்குத் தப்புவதில்லை.

அருணகிரிநாதரும் "துள்ளிவிளையாடு புள்ளியுழை நாண வெள்ளிமலை மீதுற்றுரைவோனே" என்று 'அல்லிவிழியாலும்' என்ற திருப்புகழில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் மானின் உடற்பகுதி முழுதும், பிறர்க்குப் பயன்படுமாறு அமைந்திருக்கின்றது. இருதய வலியைப் போக்க மான் கொம்பு பஸ்பம் பயன்படுத்தப் படுகிறது. மானின் தோலில் அமர்ந்து பூஜை செய்வோர்களும் உண்டு. மற்றும் தவசிகளும் பிரம்மசாரிகளும் மான் தோலை மார்பில் ஒளிரும் பூணூலில் அணிவர் என்று திருமுறுகாற்றுப்படை கூறுகிறது. மற்றும் அரிதாரமும், கோரோஜனையும், கஸ்தூரியும் (ம்ருகமதம்) மான் வயிற்றிலிருந்து பிறப்பனவைகளாகும். 'மயிர் நீப்பின் வாழாக் கவரிமான்' என்று சொல்லக்கூடிய கவரிமான்தன் வாலின் மயிர் இறைவர்க்குரிய சாமரங்களுக்குப் பயன்படுத்துவர். இப்படிப்பட்ட மான், புராண இதிகாசங்களுக்கு ஆற்றிய தொண்டு மிகப் பெரிது.

தாருகாவனத்து இருடியர்களுடைய மனைவியர் தருக்கினை ஒழித்த சிவபிரான் மீது சினந்த இருடிகள், அவரைக் கொல்வதற்காகப் பல பொருட்களை அவர் மீது அனுப்பினர். தன் எதிரே பகைத்து வந்த புலியையும், யானையையும் உரித்துத் தோலைப் போர்த்துக் கொண்டார் சிவபிரான். ஏவிய பாம்புகளை ஆபரணமாகப் பூண்டார். பின், ஒரு மான் அனுப்பப்பட்டது. அம் மானை உமாமகேசுவரர் தனது திருக்கரத்து ஏந்திக் களித்தனர்.

 'மலையரசன் பெற்றெடுத்த மாதைத் – தலை நாள்
 ஒருகால் பிடித்திருந்தா ருன்னையுல குய்ய
 இருகால் பிடித்திருந்தார்… என்று மான்விடு தூது குறிப்பிடுகின்றது.
 
தலைவனும் தலைவியும் ஒருவர்பால் விடும் தூதுப் பொருளாகத் தனியே அமைந்த பிரபந்தங்கள் 'தூது' என்ற பெயருடனே விளங்குகின்றன. தத்தம் கற்பனைத் திறத்திற்கு ஏற்ப ஒரு பொருளைத் தூது விடுத்ததாகப் பிரபந்தங்களை இயற்றி யிருக்கின்றனர். அவற்றுள் ஒன்றுதான் மான் விடு தூது.

மானின் பெருமைகளைப் பலவகைகளில் வருணிக்கிறது மான் விடு தூது--- மான் தேவாமுதங் கடைந்த காலத்தில் தோன்றிய சந்திரனிடத்தே இருந்ததென்பதும், சிவபெருமான் திருக்கரத்தே இருக்கும் பெருமை வாய்ந்தது என்பதும் கூறுகிறது. இன்னும் பற்பல செய்திகளைக் கூறுகிறது.

திருமகள் மான் உருவம் பெற்று, திருமாலின் பார்வையினால் கருவுற்று, அதன் விளைவாக வள்ளி நாச்சியார் மான் வயிற்றினின்றும் அவதரித்தார். அரசன் தசரதனுக்காக புத்ர காமேஷ்டி யாகம் செய்வித்த கலைக் கோட்டு முனிவர் (ருஷ்யஸ்ருங்கர்) மான் கொம்பைப் பெற்றார். ஒரு மானைத் துரத்திச் சென்றதன் காரணமாக, துரியோதனாதியரது ஏவலினால் காளமாமுனிவர் செய்த யாகத்திலிருந்து எழுந்த பூதத்தினின்றும் பாண்டவர்கள் தப்பிச் சென்றனர் .மான் துர்க்கைக்கு வாகனமாக அமைந்துள்ளது. ஒரு மானை எய்த பாவத்தால் பாண்டு என்னும் அரசன் இறக்க நேரிட்டது. மான் வாயுவுக்கும் வாகனமாக உள்ளது. இவ்வாறு புராண இதிகாச வரலாறுகளில் வரும் மானின் செய்கைகளை – மான் விடுதூது மூலம் ஒருவாறு அறியலாம்.

மற்றும் மாய மாரீச மான் பிடிக்கச் சொன்ன மயில் (சீதை) விளைத்த கதை இராமாயணம் என்னும் திவ்ய காவியமாயிற்று. என்பது உலகம் அறிந்ததே.

மான் என்னும் பெயரைத் தன் ஒரு பகுதியாகக் கொண்டுள்ள கலை மான்  (ஸ்ரஸ்வதி) தன் நாவில் இருத்தலால் பிரம்ம தேவர் பெருமையுற்றார் என்றும் கூறுவதுண்டு. பரமசிவன், திருமால் ,அரசர்கள் ஆகியோர் 'மான்' என்பதை ஒரு பகுதியாகக் கொண்டு, 'பெருமான்' என்னும் பெயரைப் பெற்று வீறு பெறுகின்றனர். அவ்வாறே தத்தம் பெயரில் ஒரு பகுதியாக 'மான்' என்பதை உடையவராகையால் 'அந்திமான்', 'சந்திமான்' என்னும் வள்ளல்களும், சேரமான் பெருமாள் நாயனாரும் புகழ் பெற்றனர்.

ஒரு மானைக் கரத்தில் வைத்து, ஒருமானை சிரத்தில் (கங்கை) வைத்ததால் சிவபெருமான் 'இருமான் தலைவர்' எனப்பட்டார்.
 
சிவபிரானையும், 'மான்' விகுதி போட்டு, "அத்திமான் கலைமான் ஐந்தரு நிழல் மான் அயில் விழிக்கு அஞ்சனமளித்த புத்திமான் என்றே கடு வடையாளம் பொறித்த சுந்தரமுடைப் பெம்மான்" என்று சீகாழித்தல புராணம் கூறுகிறது.
அத்திமான் – அலைமகளான இலக்குமி; கலைமான் – சரஸ்வதி ஐந்தரு—நிழல்—மான்-----இந்திராணி; இவர்கள் கண்ணுக்கு அஞ்சனம் தீட்டி, சுமங்கலியாக வாழ வேண்டுமென்று எண்ணி, புத்திமான் (ஆலகால) விஷத்தின் கரிய அடையாளம் தாங்கிய கழுத்துடைய பெம்மானாகும். என்று பொருள்
வில்லுக்கும் மானுக்கும் உள்ள பொதுப் பெயர் --- சாரங்கம் ஆகும்

மற்றும் அருணம், கலை, நல்லி, பிணை, மறி, மிருகம், வச்சயம் போன்ற மற்ற பெயர்களும் மானுக்கு உண்டு. இத்துணை சிறப்புக்கள் வாய்ந்த 'மான்' என்னும் பெயரை எப்படியாவது திருப்புகழில் கையாள வேண்டும் என்று அருணகிரிநாதர் நினைத்தார் போலும்!

 முருகபிரான், "வனசரமானுக் குகந்து, புனமிசை ஓடிப்புகுந்து, நன்குற மங்கை மானை மாலாய் மணந்து, வஞ்சி குறமானோடு உம்பர் தரு மான் அணைந்து அழகிலங்கு மார்பை உடையவனாய் திகழ்கிறான்" என அருணகிரிநாதர் கூறுகிறார். பற்பல இடங்களில் வள்ளியம்மையை மான் என்றே குறிப்பிடுகிறார்.
 
"வேடர் மானுக்கும் உயர் தேவயானைக்கும்"; "உம்பர் கும்ப வாரணாசலம் பொருந்து மானையாளும் நின்ற குன்ற மற மானும்"; "புனமதில் இனிதுறை தனி மானும்"; "குஞ்சர வஞ்சியும் மான் மடந்தையும்"; "பக்கம் யானைத் திருவொடொக்க வாழக் குறவர் பச்சை மானுக்கினிய பெருமாளே"; "அழகினொடு மான் ஈனும் அரிவை காவலா" ----- இப்படிப் பல பாடல்களில் வள்ளி பிராட்டியை - மான் -- என்ற அடை மொழி வைத்துக் குறிப்பிடுகிறார். அதைத் தவிர வள்ளியை --- கோலமறமான், தனிமான், எயினர் மடமான், கரமான், மடமான், கானச் சிறு மான், குற மான், தனி மான், தினைப் புன மான், ஞானக் குறமான், தோகை மான், புன வெற்பு மான், மான் மடந்தை, வள்ளி மான், வேடுவர் மான் என்று கூப்பிடுகிறார்.

வள்ளி பிராட்டி மான் மகள் என்பது யாவரும் அறிந்ததே ஆனால் அருணகிரிநாதர், தெய்வயானைப் பிராட்டியையும் மான் என்று சொல்ல ஆசைப் படுகிறார்.

வள்ளியம்மை தினைப்புனத்து மான் என்றால், தெய்வயானை கற்பக வனத்து மானாவாள். மண்ணாட்டுப் புனத்தில், தினை விளைத்தலால், தினைப் புனமாயிற்று. விண்ணாட்டுப் புனம் பொன் விளைத்தலால், பொன் வனமாயிற்று (பொன்னுலகம்) ஆகவே 'கலை மடவார்' என்று தொடங்கும் திருப்புகழ் பாடலில் வள்ளி பிராட்டியை "தினைவன மான்" என்றும் தேவகுஞ்சரியை "கந வன மான்" என்றும் அழைக்கிறார். பாராட்டுக்குரியவர்.

 அருணகிரிநாதர் ஒரு இனிமையான சொல்லையோ, பொருளையோ கையாளும் திறம் இருக்கிறதே, அதை நாம் என்ன பாராட்டுவது! முருகன் தான் பாராட்டிவிட்டானே!

 இப்பொழுது, கலைமடவார் என்னும் திருத்தணித் திருப்புகழ் பாடலை பொருளோடு பார்க்கலாம்.
 
கலைமட வார்தஞ் சிலையத னாலுங்
கனவளை யாலுங்                     கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயங்
கருதலை யாலுஞ்               சிலையாலுங்
கொலைதரு காமன் பலகணை யாலுங்
 கொடியிடை யாள்நின்           றழியாதே
குரவணி நீடும் புயமணி நீபங்
 குளிர்தொடை நீதந்                     தருள்வாயே
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
 திருமகள் நாயன்                தொழும்வேலா
தினைவன மானுங் கநவன மானுஞ்
 செறிவுடன் மேவுந்              திருமார்பா
தலமகள் மீதெண் புலவரு லாவுந்
 தணிகையில் வாழ்செங்        கதிர்வேலா
தனியவர் கூருந் தனிகெட நாளுந்
 தனிமயி லேறும்           பெருமாளே
 
கலை = மேகலை முதலிய இடையணிகள் அணிந்த .
மடவார் தம் =பெண்களின்
 சிலை அதனாலும் = வசைப் பேச்சின் ஒலியாலும்
கன வளையாலும் = திரண்ட. சங்கின் ஒலியாலும்.
கரை மேலே =கரை மேல் (இருந்து கூவும்).
கருகிய காளம் = ( மன்மனது எக்காளமாகிய) கரிய குயிலின் ஒலியாலும் 
பெருகிய தோயம் = பெருகியுள்ள கடல் நீரின் ஒலியாலும் 
கருது அலையாலும் =சிந்தனை அலைகளாலும்
சிலை ஆலும் = வில்லினிடத்து அசைகின்ற.
கொலை தரு காமன் = கொலை செய்ய வல்ல மன்மதனது
 பல கணையாலும் = பல பாணங்களாலும்
 கொடி இடையாள் = கொடி போன்ற இடையை உடைய இவள் (தலைவி) 
நின்று அழியாதே = கவலைப் பட்டு நின்று அழிந்து படாமல்.
குரவு அணி = குரா மலர்களை அலங்காரமாக அணிந்துள்ள.
 நீடும் புயம் அணி = நீண்டு விளங்கும் திருப்புயத்தில் அணிந்துள்ள.
நீப குளிர் தொடை மாலை = குளிர்ந்த கடப்ப மலர் மாலையை
 நீ தந்து அருள்வாயே = நீ அளித்து அருள வேண்டுகின்றேன்.
சிலைமகள்நாயன் = மலையரசன் மகளாகிய பார்வதி தேவியின்தலைவனான சிவபெருமானும் 
கலை மகள் நாயன் = கலைகளில்சிறந்த சரஸ்வதி தேவியின்தலைவனான பிரமதேவரும்.
 திருமகள் நாயன் = இலக்குமியம்மையின் கணவராகிய திருமாலும்
 தொழும் வேலா = வணங்கித் துதிக்கும் வேலாயுதரே!
தினை வன மானும் = தினைப் புனத்தில் இருந்த மான் போன்ற வள்ளியும்
 கந வன மானும் = விண்ணுலகத்திலுள்ள பெருமை வாய்ந்த கற்பக வனத்தில் வளர்ந்த மான் போன்ற தெய்வயானையும்
 செறிவுடன் மேவும் = உளம் கலந்து நெருங்கி அணையும்
 திருமார்பா = திருமார்பனே
தல மகள் மீது = நில மகளாகிய பூமியின் மேல் 
எண் புலவர் = மதிக்கப்படும் சிறந்த புலவர்கள் (தேவர்கள் )
உலாவும் = வந்து உலாவும்.
 தணிகையில் வாழ் = திருத்தணிகை மலை மீது வாழும் 
செம் = சிவந்த (செம்மையான)
கதிர் வேலா = ஒளி பொருந்திய வேலை ஆயுதமாக உடையவனே .
தனி அவர் = (சுற்றமும் பற்றும் ஒழித்துத்) தனிமையைவிரும்பித் தவம் செய்யும் அடியார்களின் (மா தவர்)
 கூரும் தனி கெட = மிகுந்த தனிமை நீங்க 
நாளும் = நாள் தோறும் 
தனி மயில் ஏறும் பெருமாளே =ஒப்பற்ற மயில் மீது எழுந்தருளி அவர்களுக்கு அருளும் பெருமாளே!

இந்த ஆன்மாவின் துயர் தீர நினது திருமார்பில் தரித்துள்ள குளிர்ந்த கடப்ப மாலையைத் தந்து அருள் புரிவாயாக!
 
திருத்தணியில் அயன், அரி, அரன் என்ற மும்மூர்த்திகளும் முருக வேளை வழிபட்டனர் என்று தெரிகிறது. பிரம்ம தேவர் முருகரை வழிபட்டு, சிருஷ்டித் தொழிலின் வன்மையைப் பெற்றார். திருமால் முருகனை வழிபட்டு, தாரகாசுரனால் கவரப்பட்ட சக்ராயுதத்தைப் பெற்றார். சிவபெருமான் முருகரைத் தியானம் செய்து, உபதேசம் பெற்றார்.
 
வஞ்சிக் குற மானொடு உம்பர் தருமான் அணைந்திலங்கு திருமார்பினனை உடைய முருகனை நினைந்து, நாளும் திருப்புகழ் பாடி, நாம் செய்யப்போகும் செயலில் இறங்கினால், 'சேரொணாவகை வெளியே திரியும் மெய் ஞான யோகிகள் உளமே உறைதரு குமரன்", "ஆன பயபக்தி வழிபாடு பெறு முக்தி அதுவாக நிகழ் பக்தஜன வாரக்காரனாக இருந்து", சுத்த பத்தத்தர்க்குச் சித்தத் துக்கத்தை ஒழித்திடும் வீரனாக இருக்கும், "பக்கம் யானைத் திருவொடு , ஒக்க வாழக் குரவர் பச்சை மானுக்கினிய பெருமாள்", நமக்கும் வெற்றி கிட்ட அருள் புரிவான் என்பது திண்ணம்!
 
வனசரமானுக்குகந்து புனமிசை ஓடிப் புகுந்தவனை, நம் மனமாகிய வனத்திலிருந்து தப்பி ஓடாமல், தக்க வைக்க, அவனுடைய திருப்புகழ் பாடல்களைப் பாடி அவனை ஏத்துவோமாக!
 
ஷண்முக கவசம் பத்திரிகை 2014 தீபாவளி மலரில் வெளி வந்தது.


No comments:

Post a Comment