Tuesday, January 6, 2015

Apakaara nindai- Thirupugazh

Courtesy: Sri.Sundararajan

Muruga-12.jpg

அபகார நிந்தை - பழநி

அபகார நிந்தைபட் டுழலாதே
அறியாத வஞ்சரைக் குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனைநானி னைந்தருட் பெறுவேனோ
இபமாமு கன்தனக் கிளையோனே
இமவான்ம டந்தையுத் தமிபாலா
ஜெபமாலை தந்தசற் குருநாதா
திருவாவி னன்குடிப் பெருமாளே




பதம் பிரித்து உரை

அபகார நிந்தை பட்டு உழலாதே
அறியாத வஞ்சரை குறியாதே


அபகார நிந்தை பட்டு = தீமை செய்ததினால் நிந்தனைகளுக்குஆளாகி. 
உழலாதே = அலையாமலும் அறியாத =(நன்னெறியை) கைக்கொள்ளாத. 
வஞ்சகரை =கயவர்களுடன் 
குறியாதே = இணங்குவதைக் கருதாமலும்.

உபதேச மந்திர பொருளாலே
உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ


உபதேசப் பொருளாலே = (நீ எனக்கு அருளிய) உபதேச மந்திரப் பொருளையே துணையாகக் கொண்டு 
உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ = உன்னை நான் நினைந்து உன் திரு வருளைப் பெற மாட்டேனோ.

இபமா முகன் தனக்கு இளயோனே
இமவான் மடந்தை உத்தமி பாலா

இபமா முகன் தனக்கு = யானை முகம் உடைய விநாயகருக்கு
இளையோனே = தம்பியே 
இமவான் மடந்தை = இமய ராசன்மகளாகிய பார்வதி என்னும் 
உத்தமி பாலா = உத்தமியின் பிள்ளையே.

ஜெமாலை தந்த சற் குரு நாதா
திருவாவினன் குடி பெருமாளே

ஜெபமாலை தந்த சற் குரு நாதா = ஜெபமாலை ஒன்றை எனக்குத் தந்த சற்குரு நாதனே 
திருவாவினன்குடிப் பெருமாளே = திருவா வினன் குடியில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

தீமை செய்யும் நிந்தைகளுக்கு ஆளாகி அலையாமலும், நன்னெறியைக் கைக்கொள்ளாத வஞ்சகர்களாகிய விலை மாதர்களுக்கு இணங்காமலும், நீ எனக்கு உபதேசித்த மந்திரப் பொருளையே துணையாகக் கொண்டு, உன்னை நினைந்து, உன் திருவருளைப் பெற மாட்டேனோ? கணபதியின் தம்பியே, பார்வதி தேவியின் மகனே, எனக்கு ஜெபமாலையைத் தந்த சற்குருநாதனே, திருவாவினன்குடியில் வீற்றிருக்கும் பெருமாளே,உன்னை நினைந்து அருள் பெற வேண்டுகின்றேன்.

பழனி மலையின் அடிவாரத்தில் உள்ள திரு ஆவினன்குடியில் தான் அருணகிரிநாதருக்கு முருகன் ஒரு ஜெபமாலையைத் தந்து அருளியதாக நம்பப்படுகிறது


Read more: http://amrithavarshini.proboards.com/thread/849/#ixzz3K4t7qkmx

No comments:

Post a Comment