வரதாச்சாரி 40 வருஷமாக பரம்பரை பட்டாச்சாரி. அந்த சிறிய பழைய கோபால கிருஷ்ணன் கோவிலிலிருந்து அப்படியொன்றும் ஓஹோ என்று வருமானம் இல்லையென்றாலும் பாரம்பரியமாக தலை முறை தலைமுறையாக சேவை செய்து வந்தது அவர் குடும்பம். அவர் கிருஷ்ணனோடு நிறைய பேசுவார். ஆனால் கிருஷ்ணன் பேசுவதில்லை. எது சொன்னாலும் எதுசெய்தாலும் கிருஷ்ணன் விக்ரகம் சிரித்து கொண்டே தான்பார்த்து கொண்டிருக்கிறது. இது ஏன்? என்று வரதாச்சாரிக்கு ஒரு சந்தேகம்.
''கிருஷ்ணா, பாவம் நீ. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து எத்தனையோ குறைகள் சொல்லி, நன்றிசொல்லி, என்னென்னவோ சொல்கிறார்கள். படிக்கிறார்கள், புலம்புகிறார்கள், மகிழ்கிறார்கள். அனைத்தையும் சிரித்துகொண்டே, பொறுமையோடு, வாய் திறக்காமல் வெறுமே பார்த்துக்கொண்டேஉணர்ச்சி காட்டாமல் நாள் முழுதும் கால் கடுக்க தினமும் நிற்கிறாயே, உனக்கும் ஒய்வு வேண்டாமா, கிறாயே? உனக்கு எவ்வளவு ஆயாசமாக இருக்கும்?
கிருஷ்ணன் இன்று அதிசயமாக வரதாச்சாரியோடு பேசினான்.
"ஆமாம் அப்பா, ஒய்வு தேவைதான், என்ன செய்ய?"
"நான் வேண்டுமானால் உனக்காக ஒருநாள் நிற்கட்டுமா?"
"ரொம்ப சந்தோஷம், நான் உன்னை என்போல்சிலையாக்குகிறேன், ஆனால் எந்த காரணம் கொண்டும் நீ உன் உணர்சிகளைக் காட்டவோ, பேசவோ, எந்த பக்தர்விஷயத்திலும் தலையிடவோ கூடாது. புன்னகையோடுஅனைவருக்கும் பாரபட்சமின்றி அருளும் ஆசியும், தர்சனமும் வழங்கவேண்டும். செய்வாயா?"
"அவ்வாறே ஆகட்டும். நீ சொன்னபடியே செய்கிறேன் ".
மறுநாள் வரதாச்சாரி கிருஷ்ணன் சிலையாக நின்றார்,
முதலில் அன்று ஒரு பணக்காரர் வந்தார். கடவுளைவேண்டிக்கொண்டு, பெரும் தொகையை நன்கொடையாக கோயிலுக்கும் வழங்கினார். போகும்போதுதன்னுடைய கையிலிருந் பணப்பையை ஞாபகமறதியாக (நிறைய பணம் அதில் இருந்தது) விட்டு விட்டுசென்று விட்டார்.
வரதாச்சாரிக்கு தாங்கமுடியவில்லை " செட்டியாரே, உங்கள் மணிபர்ஸ் இங்கே வைச்சுட்டேளே. எடுத்து கொண்டுபோம் " என்று சொல்ல நா எழும்பியது. ஆனால் கிருஷ்ணன் தான் வாய் திறக்கக்கூடாது என கட்டளையிட்டது நினைவுக்குவர, பேசாமல் பார்த்து கொண்டே நின்றார்.
சிறிது நேரம் கழிந்தது. ஒரு பரம ஏழை கிருஷ்ணனை வணங்கி தன்னிடமிருந்த ஒரு ரூபாயை மனமார காணிக்கையாக செலுத்தி விட்டு பிரார்த்தனைசெய்தான். " கடவுளே, என் குடும்பம் நிர்கதியாய் நிற்கிறது. கடன் தொல்லை வாட்டுகிறது. எவ்வளவு உழைத்தாலும் ஊதியம் போரவில்லை. நீயே கதி" என வேண்டிக்கொண்டு கண்ணை திறந்தான். என்ன ஆச்சர்யம். விண்ணென்று பணம்நிரம்பிய ஒரு பை எதிரில் தோன்றியது.(செட்டியார் விட்ட பை). . கடவுளே, இதுவும் உன் மாயா லீலை தானோ?
இது தான் உன் கட்டளை என்றால் அவ்வாறே ஆகட்டும். மகிழ்ச்சியோடும் நன்றியோடும் அம்மனிதன் பணப்பையை எடுத்து சென்றுவிட்டான். " அடே மணியக்கார குப்புசாமி, அது அரிசிமண்டி செட்டியார் விட்டு சென்றது, வைத்து விட்டு போ!!" என வரதாச்சாரிக்கு உரக்க கத்தி சொல்லதோன்றியது .ஆனால் கிருஷ்ணனின் கட்டளை நினைவுக்கு வர வாய் மூடி நின்றான்.
அடுத்து கோடித் தெரு குமாரசாமி பத்தர் மகன் சீனு. ஒரு கப்பல்மாலுமி உத்யோகம். லீவில் வந்தவன். கிருஷ்ணன் முன் நின்றான். . "கடவுளே, இன்று இரவு என் கப்பலில் வெளிநாடுசென்று மீண்டும் குடும்பத்தைப் பார்க்க ஒரு வருடம் ஆகுமே, நீ தான் என்னையும், என் கப்பலையும், அனைத்து சிப்பந்திகளையும், என் குடும்பத்தையும் காத்தருள வேண்டும்" என வேண்டி நின்றுகொண்டிருந்தபோது திடீரென்று பணம் கோட்டை விட்ட செட்டியாரும் ஒரு போலீஸ்காரனும் கோவிலுக்குள் நுழைந்தார்கள். செட்டியார் வியர்க்க விருவிருக்க வேக வேகமாக சந்நிதியருகில் வந்து தனது பணப்பையைத் தேடினார் . அங்கு நின்றுகொண்டிருந்த கப்பல் மாலுமி சீனு கண்ணில் பட்டதும் செட்டியார் சந்தேகம் மாலுமி மீது விழவே அருகில் நின்ற போலீஸ்காரனிடம் "இதோ நிற்கிறானே இவன் தான் என் கை பையை அபேஸ்பண்ணியிருக்கவேண்டும். இவனைக் கைது செய்து உதை திங்க வைத்தால் உண்மையை கக்கிவிடுவான் " என்று அலறினார் .
"எனக்கு ஒன்றும் தெரியாது அய்யா. நான் எந்த பணப் பையையும் இங்கு பார்க்க வில்லையே" என்று மாலுமி சீனு கதற, செட்டியார் பணம் போன ஆத்திரத்தில் சந்தேகம் வலுக்க ''கொண்டு போங்கள் இவனை. திருட்டு முழி முழிக்கும்போதே தெரிகிறதே.என்று போலிஸ்காரனை அதட்ட, சீனுவை போலீஸ் காரன் அழைத்து செல்லும் நேரத்தில், வரதாச்சாரிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது.
" அய்யா போலீஸ் காரரே, நான் சொல்வதைக் கேளும். இந்தமனிதர் திருடனில்லை. பணப் பையை அந்த ஏழை மணியக்காரன் குப்புசாமிப்பயல் தான் இங்கு வந்தபோது எடுத்து சென்றுவிட்டதை நான் பார்த்தேன். இந்த மனிதன் அப்பாவி அவனை விட்டு விடுங்கள்" என திருவாய் மலர்ந்தார். "
மாலுமி சீனு எதிலும் அதிக உணர்ச்சி வசப்படுவான். அவனுக்கு கிருஷ்ணனே தனது பக்திக்கு மெச்சி, ''பேசி'' ஞாயம் தீர்ப்பு வழங்கியதில் பரம ஆச்சர்யம்.. சந்தோஷம்.
"கலியுகத்தில் கண் கண்ட தெய்வமே கோபால கிருஷ்ணா,, நீயே பேசி உண்மையை உணர்த்தி என்னை காப்பாற்றினாய் " என வணங்கினான்.
செட்டியார் இந்த உலகத்திலேயே இல்லை. ஆகாசத்தில் பறந்தார். கண்கண்ட கலியுகத்தில் ப்ரத்யக்ஷ தெய்வம் நமது கிருஷ்ணன். மணியக்காரன் குப்புசாமியிடம் தான் எனது பணப்பை இருக்கிறது கவலைப்படாதே'' என்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்தாயே, கோபால கிருஷ்ணா.'' என்று நமஸ்காரம் பண்ணினார். ஏழை பக்தன் மணியக்கார குப்புசாமி வீடு விலாசம் அறிந்துகொண்டு அவனிடத்திலிருந்து பணப் பையை பெற போலீஸ்காரன் உதவி நாடினார் செட்டியார். கடவுளே பேசிய அதிர்ச்சியில் இன்னும் மீளாமல் ஓட்டமாய் ஓடி போலீஸ் காரர் குப்புசாமியின் வீட்டுக்குப் பறந்தார். வரதாச்சாரிக்கு தான் ஒரு நீதிமானாகநடந்ததில் பெரு மகிழ்ச்சி.
அன்றிரவு கிருஷ்ணன் வரதாச்சாரி முன் தோன்றி " வரதாபோதும் உன் உதவி. என் வேலையை நானே பார்த்துக்கொள்கிறேன். நீ உன் வேலையைப் பார்'' என அதிருப்தியுடன் சொன்னான் ."
''ஏன் நான் என்ன தப்பு செய்தேன் கிருஷ்ணா?''
"போதும் போதும், ஒருநாள் நீ என் வேலையைப் பார்த்தது. செட்டியார் கொடுத்த நன்கொடையும், கைப் பையில் இருந்தபணமும் திருட்டு வழியில் சம்பாதித்தது. கோவிலுக்குநன்கொடை என்கிற நல்ல காரியத்தில் அப்பணம் ஈடுபடும்போது அதற்கு பரிகாரமாக கொஞ்சம் பணம் ஒரு உண்மையான ஏழைக்கு உதவியாகப்போகட்டுமே அந்த புண்யமாவது செட்டியாரின் பாவத்தை குறைக்கட்டுமே என ஏற்பாடு செய்தேன்''
மாலுமியை போலீஸ்காரன் சிறை செய்து கப்பலில் வெளிநாடு செல்லாமல் செய்வதற்காக நான் போட்ட பிளானை நீகெடுத்துவிட்டாய். இன்றிரவு கடலில் பிரயாணம் செய்யும் அவன் கப்பல் சுனாமியில் மூழ்கப் போகிறது. அவனையும், கப்பலில் இருக்கும் மற்றவரையும், மாலுமியின் குடும்பத்தையும் காப்பாற்ற நான் செய்ய நினைத்ததை நீ மாற்றிஅமைத்தாய். " ஒரு நாளில் இவ்வளவு செய்து விட்டாயே. நான் கட்டளையிட்டபடியே பேசாமல் பார்த்து கொண்டிருந்தால் இதுநடந்திருக்குமா? என கிருஷ்ணன் கேட்டபோது தான் வரதாச்சாரிக்கு உறைத்தது.
இறைவனின் சங்கல்பமும் செயலும், அருளும், நம் சிற்றறிவுக்கு எட்டாதவை அல்லவா?
No comments:
Post a Comment