Tuesday, October 11, 2011

சுவாரசியமான தகவல்கள்; பொறுமை கடலினும் பெரிது; தாய்மையைப் போற்றி வழிபடும் நவராத்திரி

Courtesy: Sri.Kodhandaraman

கருத்துள்ள சிரிப்பலைகள்!

பெல்ட்


இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. முசோலினி ஹிட்லருக்கு தந்தி அனுப்பினார்,''நிலைமை மிக மோசம். உணவு அவசரத்தேவை. தயவுசெய்து உடனே அனுப்பி வைக்கவும்,''ஹிட்லரிடமிருந்து பதில் தந்தி சென்றது,''உணவுப் பொருட்கள் தங்களுக்கு அனுப்ப வசதி இல்லை. வருந்துகிறேன் ஒவ்வொரு தானிய மணியும் உள்நாட்டிற்கும்,ரஷ்யப் போர்முனைக்கும் தேவைப்படுகிறது ஆகவே வயிறுகளைப் பெல்ட்டினால் இறுகக் கட்டிக் கொள்ளவும்,''முசோலினி மீண்டும் தந்தி அனுப்பினார்,''தயவு செய்து பெல்ட்டுகளையாவது அனுப்பி வையுங்கள்.''

இரவல்
 
பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார். அதற்கு அந்த நண்பர்,''என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,''என்றார். மார்க் ட்வைன் பேசாமல் திரும்பி விட்டார். சில நாட்கள் கழித்து அதே நண்பர் மார்க் ட்வைனிடம்,''உங்கள் தோட்டத்துக் கடப்பாறையை ஒரு நாள் இரவல் கொடுங்கள்,''என்று கேட்டார். மார்க் ட்வைன் அமைதியாகச் சொன்னார்,''என் தோட்டத்தில் தோண்டுவதாக இருந்தால் கொடுக்கிறேன்.''

ஒருவர் பெர்னாட்ஷாவைக் கேட்டார்,''ஏன் இப்படி பஞ்சத்தில் அடிபட்ட ஆள் மாதிரி இருக்கிறீர்கள்?''ஷா சொன்னார்,''என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது உண்மை. ஆனால் பஞ்சம் எப்படி வந்தது என்பது உங்கள் உருவத்தைப் பார்த்தாலே தெரியும்!''

ஒருவர் நேதாஜியிடம் சொன்னார்,''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்,''நேதாஜி சொன்னார்,''உண்மை.அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே பயம். அவ்வளவு பெரிய திருடர்கள்.''


இயல்புதானே?

பண்டித மணி கதிரேசன் செட்டியார் ஒருநாள் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரைப் பார்க்க சென்றிருந்தார். அவர் ஆதீனத்தை உடல் தாழ்ந்து வணங்கும் போது கால் தடுமாறிக் கீழே விழப்போனார். ஆதீனத்தலைவர் அவரை சட்டென்று எழுந்து தாங்கிப் பிடித்துக் கொண்டார். செட்டியார் மறுபடியும் ஆதீனத்தை வணங்கி,''எல்லாமே இயல்பாகத்தானே நடந்திருக்கிறது,சுவாமி,''என்றார். ஆதீனத் தலைவர் அவர் சொல்வது விளங்காமல்,''இயல்பாக என்ன இப்போது நடந்தது?''என்று கேட்டார். கதிரேசன் செட்டியார் விளக்கம் சொன்னார்,''எங்களைப் போன்ற அடியவர்கள் தவறுவதும், தங்களைப்போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் தாங்கி வழி நடத்துவதும் இயல்புதானே? அதுதானே இப்போது நடந்திருக்கிறது?''ஆதீனத் தலைவர் செட்டியாரின் நகைச்சுவை உணர்வு கண்டு மகிழ்ந்தார்.


திருநாள்

ஹிட்லர் ஒரு ஜோதிடரிடம்,''நான் எப்போது மரணம் அடைவேன் என்று சொல்ல முடியுமா?''என்று கேட்டார். அதற்கு ஜோதிடர்,''யூதர்களின் திருநாள் அன்றுதான் தாங்கள் மரணம் அடைவீர்கள்.''என்றார். ஹிட்லர் உடனே,''யூதர்களின் திருநாள் எப்போது வரும்?''என்று வினவினார். ஜோதிடன் சொன்னான்,''தாங்கள் இறக்கும் நாள்தான் யூதர்களின் திருநாள்.''ஜோதிடன் உயிருடன் திரும்பியிருப்பானா?


பிடித்த மதம்

மதுரையில் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு சொற்பொழிவாற்ற கவிஞர் கண்ணதாசன் அழைக்கப்பட்டிருந்தார். விழா அரங்கு முழுவதும் மாணவர்கள். குறித்த நேரத்தில் கவியரசர் வரவில்லை. மாணவர்கள் விசிலடித்து சப்தம் போட ஆரம்பித்தனர். ஒரு வழியாய் ஒரு மணி நேர தாமதத்தில் வந்து சேர்ந்தார் கவிஞர். கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தியபோது கூட மாணவர்களிடையே சலசலப்பு குறையவில்லை. பின் கண்ணதாசன் பேச ஆரம்பித்தார்,''ஒரு சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமும்,சிலருக்கு கிறிஸ்துவ மதமும் பிடிக்கும். எனக்குப் பிடித்த மதம்.....''என்று சொல்லி நிறுத்தினார். மாணவர்களிடையே அமைதி. அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அனைவருக்கும் ஆவல். அவர் தொடர்ந்தார்,''எனக்குப் பிடித்த மதம் தாமதம்,''என்று சொன்னவுடனேயே பலத்த கரவொலி எழுந்தது. அதன் பின் அவர் தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு தன் இனிய பேச்சைத் தொடர்ந்தார்.


வரவேற்பு

காந்தி அடிகள் ஒரு முறை கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனுக்கு சென்று இருந்தார். தாகூர் தேசப் பிதாவை வரவேற்கும்போது,''என்றும் இளமை பொருந்திய எங்கள் இதய அரசியான சாந்தி நிகேதன் தங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறாள்,'' என்றார். மகாத்மா சிரித்துக் கொண்டே,''அப்படியானால் இந்தக் கிழவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று சொல்லுங்கள். இல்லாவிட்டால்,என்றும் இளமையுடன் விளங்கும் உங்கள் அரசி இந்தப் பல் இல்லாத கிழவனை வரவேற்பாளா?''என்று பேசினார். காந்திஜியின் நகைச்சுவை உணர்வை அனைவரும் ரசித்தனர்.


மும்மணிகள்

ஒரு விழாவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,ரசிகமணி டி.கே.சி.,கல்கி ஆகிய மூவரும் கலந்து கொண்டனர்.வரவேற்புரை நிகழ்த்திய ஒருவர் ,''இவ்விழாவில் மும்மணிகள் கலந்துகொண்டு சிறப்பு செய்துள்ளனர்,''என்று பேசினார். அடுத்து கல்கி பேச ஆரம்பித்தார்.அவர்,''வரவேற்புரையில் மும்மணிகள் வந்திருப்பதாகக் கூறினார்கள். அதில் ஒருவர் கவிமணி..இன்னொருவர் ரசிகமணி. இதில் மூன்றாவது மணியாக இருப்பதற்கு நான் ஒரு பெண்மணியாகக் கூட இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது,''என்று பேச கூட்டத்தில் சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று.


பேசும் எந்திரம்

பிரபலமான விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து கொண்டபோது ஒரு நண்பர் அங்கு வந்து பேச ஆரம்பித்தார். எடிசனிடம் அவர் தொடர்ந்து இடை வெளியில்லாது நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். எடிசனுக்கோ தாங்க முடியவில்லை. இருந்தாலும் அங்கிருந்து நகலவும் வழியில்லை. நண்பர் அருகிலிருந்த இன்னொருவரிடம் எடிசனை அறிமுகப் படுத்தினார்,''பேசும் எந்திரமான கிராம போன் ரிக்கார்டைக் கண்டு பிடித்தது என் நண்பர் எடிசன்தான்,''என்றார். எடிசன் அவரிடம் சொன்னார்,''நான் பேசும் எந்திரத்தைக் கண்டு பிடித்தது உண்மைதான். ஆனால் நினைத்த நேரத்தில் அதை நிறுத்தி விட முடியும்.''


சீனிவாசன்

பண்டிதமணி கதிரேசன் செட்டியாருக்கு ஒருவர் விருந்தளித்தார். உணவு சாப்பிட்டு முடிந்ததும் அவருக்கு ஒரு தம்ளரில் பால் கொடுத்தனர். அதை வாங்கிய பண்டிதமணி தம்ளரை உற்றுப் பார்த்துவிட்டு,''திருப்பாற்கடலில் சீனிவாசன் பள்ளி கொண்டிருக்கிறாரே!''என்றார். விருந்தளித்தவருக்கு ஒன்றும் புரியாமல் திகைப்பு ஏற்பட்டது. உடனே பால் தம்ளரை வாங்கிப் பார்த்தார்,''அடடே,எறும்பு இருக்கிறது,''என்றார். செட்டியார் சொன்னார்,''எறும்பு சீனியில்  வாசம் செய்யக் கூடியது அல்லவா? அதனால் தான் அதை சீனிவாசன் என்று சொன்னேன்''என்றார்.


உபயோகம்

1961 ல் சீனா இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. அப்போது நேரு பிரதமராக இருந்தார்,பாராளுமன்றத்தில் ஆக்கிரமிப்பு பற்றி ஏகப்பட்ட சலசலப்பு. அப்போது நேரு ,''சீனா சில பகுதிகளைப் பிடித்திருப்பது உண்மைதான். ஆனால் அவை ஒன்றுக்கும் பயன்படாத பகுதிகள். அங்கு புல் பூண்டு கூட முளைக்காது.''என்றார். உடனே சிறந்த பாராளுமன்றவாதியான  மகாவீர் தியாகி எழுந்து  ,''இதோ,என் தலையைப் பாருங்கள்,''என்று கூறி தனது வழுக்கைத் தலையைக் காட்டினார். பின் அவர் கேட்டார் ,''என் தலையில் கூட ஒன்றும் முளைக்கவில்லை. அதனால் அது பயனில்லாத பகுதி என்று சொல்வீர்களா?''நேரு உட்பட அனைவரும் சிரித்து விட்டார்கள்.


சொல்லின் செல்வர்

ஒரு ஊரில் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தபோது பாதியில்  ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார்,''ராமாயணத்தில் அனுமனை சொல்லின் செல்வர் என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார். போய்க்கொண்டிருந்தவர்கள் யாரை சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர். வாரியார் தொடர்ந்தார்,''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத்  தான்  சொல்கிறேன் .''


அறிஞர்

கவிஞர் வாலி ஒரு அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார். அவர் கேட்டார்,''வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?''வாலி சொன்னார்,''ராமாயணத்திலே,வாலி யாரோடுசேர்கிறானோ,அவருடைய பலத்தில் பாதி,அவனுக்கு வந்து விடுமாம். அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது,அவர்களது அறிவில் பாதிஎனக்கு வந்து விடுமல்லவா?அதனால் தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்.''அறிஞர் உடனே கிண்டலாக சொன்னார்,''அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?''  வாலி  சிரித்துக் கொண்டே,''நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே!''என்றார்.


தெரியுமா?

பிரபலமான நாவலாசிரியர்,ஜார்ஜ் மூர் ஒரு  சிறந்த மேதை. அவருக்கு இளமையில் கர்வம் மிகுதியாக இருந்தது. டப்ளின் நகர ஆர்ச் பிஷப் டாக்டர் வால்ஷ் என்பவருக்கு ஒரு நாள் ஜார்ஜ் மூர் கீழ்க்கண்டவாறு கடிதம் ஒன்றை எழுதினார்.
அன்பார்ந்த ஆர்ச் பிஷப் அவர்களே,
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் கிறிஸ்துவ மதத்தை விட்டு விட்டேன்.
                                                                         இப்படிக்கு.
                                                                       ஜார்ஜ் மூர்.
அதற்கு பிஷப் பதில் எழுதினார்:
அன்பார்ந்த மூர்,
ஒரு பசுவின் வால் நுனியில் ஈ உட்கார்ந்த கதை உங்களுக்குத் தெரியுமா? 'பசுவே நான் போய் வருகிறேன்' என ஈ கூறியதாம்.அப்போது பசு தன் வால் பக்கம் திரும்பி,''நீ இவ்வளவு நேரம் இங்கே இருந்ததே எனக்குத் தெரியாதே!''என்று பதில் சொல்லியதாம்.
                                                                        இப்படிக்கு
                                                                       ஆர்ச் பிஷப்


உடைமை

அமெரிக்காவில் எர்க் மார்வெல் என்ற பொதுவுடைமைவாதி ஒருவர் இருந்தார். அவருக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கு பொது உடைமைக் கருத்துகள் பிடிக்காது. எனவே அவர் மார்வெல்லை அடிக்கடி கிண்டல் செய்வதுண்டு. ஒரு நாள் அவர்,''நண்பரே,உலகில் எல்லாப் பொருட்களும் பொது உடைமை ஆக்கப்பட வேண்டும் என்று கூறுகிறீரே,உமதுமனைவியையும் பொதுஉடைமை ஆக்கச் சம்மதிப்பீரா?'' என்று கேலியாகக் கேட்டார். உயிருள்ள தன் மனைவியை ஒரு பொருளுடன்  ஒப்பிட்டதை மார்வெல் விரும்பவில்லை. எனினும் தன் நண்பரின் வாயடைக்க விரும்பினார். அவர் நண்பரிடம் கேட்டார் ,''தனிஉடமை தான் சிறந்தது என்று சொல்லும் நீர், உமக்கு  உரிமையுடைய உன் பெண் குழந்தைகளை நீரே மணந்து கொள்வீரா?''நண்பர் வாயைத் திறக்கவில்லை.


எந்த கட்சி?

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் தமது குடியரசுக்  கட்சிக்காக  தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். கூட்டத்தில் ஒருவன் எழுந்து,''நான் ஜனநாயகக் கட்சியை  சேர்ந்தவன்,''என்று கூச்சலிட்டான்.  ''நீ ஏன் அந்த கட்சியில் இருக்கிறாய்?''என்று அவனிடம் கேட்டார் ரூஸ்வெல்ட். அவன் சொன்னான்,''என் தாத்தா ஜனநாயகக் கட்சியில் இருந்தார். எனவே நானும் அதே கட்சியில் இருக்கிறேன்.''ரூஸ்வெல்ட் உடனே கோபத்துடன் கேட்டார்,''உன் தாத்தா கழுதையாக இருந்திருந்தால் நீ எந்தக் கட்சியில்இருப்பாய்? அவன் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சொன்னான்,''கட்டாயம் உங்கள் குடியரசுக் கட்சியில் இருந்திருப்பேன்.''


கெளரவம்

இங்கிலாந்து அரசராக இருந்தவர் எட்டாவது எட்வர்ட். சிறுவனாக இருக்கும்போது ,ஒரு நாள் அவரது ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது,''சொர்க்கத்தில் எல்லா மனிதர்களும் ஒன்றாகக் கருதப்படுவார்கள்.''என்றார்.உடனே எட்வர்ட்,''என்ன,எல்லோரும் ஒன்றாகக் கருதப்படுவார்களா?என் பாட்டி விக்டோரியா மகாராணியாரைக் கூடவா எல்லோருடனும் ஒன்றாகக் கருதுவார்கள்?''என்று சந்தேகம் கேட்டார்.''ஆமாம்.''என்று ஆசிரியர் கூறினார்.''அப்படியானால் என் பாட்டிக்கு அது கொஞ்சம் கூடப் பிடிக்காது. அவர் அங்கே உறுதியாகப் போக மாட்டார்.''என்று அப்பாவியாகப் பதில் கூறினார் எட்வர்ட்.


சோம்பேறி
 

மார்க் ட்வைன் இளைஞராக இருந்தபோது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆறு மாதம் கழிந்தபின் மேனேஜர் அவரை அழைத்து வேலையிலிருந்து, அவரை நிறுத்துவதாகக் கூறினார். காரணம் என்னவென்று வினவியபோது,மேனேஜர் சொன்னார்,''நீ ஒரு சரியான சோம்பேறி. நீ இந்த நிறுவனத்துக்கு லாயக்கில்லை.''மார்க் ட்வைன் உடனே சொன்னார்,''நீங்கள் தான் சரியான சோம்பேறி.''மேனேஜருக்கு கோபம் வந்தது. தன்னை ஏன் அவ்வாறு கூறினார் என்று கேட்க ட்வைன் சொன்னார்.';நான் ஒரு சோம்பேறி என்பதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஆறு மாதம் ஆகியிருக்கிறதே? நீங்கள் ஒரு சோம்பேறி என்பதை நான் வேலையில் சேர்ந்த அன்றே தெரிந்து கொண்டேன்.''


மரியாதைக்குறைவு

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் யாரையுமே மரியாதைக் குறைவாய்ப் பேசி அறியாதவர். பாடல்களை கூட சற்று மரியாதைக் குறைவான வார்த்தைகள் வந்துவிட்டால் அதை மாற்ற வழி இருக்கிறதா என்று பார்ப்பார். கவியரசர் கண்ணதாசன் ஒரு படத்துக்கு,''யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க.''என்று ஒரு பாடலில் எழுதியிருந்தார். மெல்லிசை மன்னர் ,''என்ன கவிஞரே,இது மரியாதைக் குறைவாய் இருக்கிறதே,கொஞ்சம் மாற்றக்கூடாதா? யாரை நம்பி நான் பிறந்தேன்,போங்கய்யா போங்க,என்று எழுதக்கூடாதா?''என்று கேட்டார். அதற்கு கவிஞர் கிண்டலாகச் சொன்னார்,''டேய்,நீ ரொம்ப அடக்கமானவன். இது எனக்கு மட்டுமல்ல.ஊருக்கே தெரியும். விஜயவாடா என்கிற ஊரைக்கூட விஜயவாங்க  என்று  சொல்கிற  ஆள் நீ. பேசாம   நான் சொல்கிற  பல்லவியை  அப்படியே  போடு .''

-------------------------------------------------------------

பொறுமை கடலினும் பெரிது, பொறுமையால் பல காரியங்களை சாதிக்கலாம். அவசரத்தாலும், ஆத்திரத்தாலும் காரியங்கள் கெட்டு விடும்.

ஒருவன் கோவிலுக்கு போனான். கோவில் சுவற்றில் பெருமாள் விக்ரகம் இருந்ததை கண்டான். அருகில் நின்று கவனித்தான். அதன் கீழே ஒரு கல்வெட்டு இருந்தது. கல்வெட்டு எழுத்துக்கள் ஒரு மாதிரியாக இருக்கும். சிலருக்கு ஒன்றுமே புரியாது; இவனுக்கு அந்த எழுத்துக்கள் தெரியும். அதனால், அதை படித்து பார்த்தான்.


"இந்த பெருமாளுக்கு எவன் ஒரே சமயத்தில், நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்கிறானோ, அவனுக்கு ராஜ பதவி கிடைக்கும்...' என்று எழுதி இருந்தது. "அடடா... ராஜ பதவி என்றால் சும்மாவா? ஒரு மந்திரி பதவிக்கே லட்ச, லட்சமாக செலவழித்து, அலையாய் அலைகின்றனர். அப்படி இருக்கும் போது, நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தால், ராஜ பதவி கிடைக்கிறதே...' என்று எண்ணினான்.


உடனே, ஓடிப் போய் ஒரு குடத்தை எடுத்து, பக்கத்திலிருந்த குளத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்து, அபிஷேகம் செய்ய ஆரம்பித்தான். ஞாபகமாக ஒண்ணு, ரெண்டு என எண்ணிக் கொண்டே அபிஷேகம் செய்தான். எழுபது, எண்பது, தொண்ணூறு குடம் ஆயிற்று...


"என்னடா இது... 95 குடம் அபிஷேகம் செய்தாயிற்று; ராஜ பதவிக்கான அறிகுறி ஒன்றுமே தெரியவில்லையே! கீரிடத்தை எடுத்துக் கொண்டு யாராவது வருகின்றனரா?' என்று சுற்றும், முற்றும் பார்த்தான்; யாரையும் காணோம். இவனுக்கு பொறுமையும் குறைந்தது.


"சரி... எப்படியாவது நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்து விடுவோம்...' என்று எண்ணி, மறுபடியும் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தான். 96, 97, 98. ஊஹும்... ராஜ பதவிக்கான அறிகுறியே காணோம்.


பொறுமையை இழக்க ஆரம்பித்தான். 99வது குடமும் அபிஷேகமாகி விட்டது; பலன் தெரியவில்லை. பொறுமையை இழந்தான். நூறாவது குடம் தண்ணீர் கொண்டு வந்து, நூறு என்று சொல்லி குடத்தை பெருமாள் தலையில் போட்டு உடைத்தான். அவ்வளவுதான், இவன் முன் தோன்றினார் பெருமாள்.
"பக்தா... நீ நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தது குறித்து மகிழ்ந்தேன்; ஆனால், பொறுமையை இழந்து, நூறாவது குடத்தை என் மேல் போட்டு உடைத்தது பெரிய அபசாரம். நூறாவது குடத்து தண்ணீரையும் பொறுமையுடன் அபிஷேகம் செய்திருந்தால், உனக்கு ராஜ பதவி கிடைக்க ஏற்பாடு செய்திருப்பேன்.
"நீ, கடைசி நேரத்தில் பொறுமையை இழந்து, அபசாரம் செய்து விட்டதால், பொறுமைக்கு அடையாளமாக, கழுதையாக ஏழு பிறவி எடுத்து, பின்னர் மனித ஜென்மா கிடைக்கும் போது, மீண்டும் எனக்கு நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தால், ராஜ பதவி கிடைக்கும்...' என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்து விட்டார்.
பொறுமை எவ்வளவு முக்கியம் என்று, இதிலிருந்து தெரிகிறதா?

-----------------------------------------------------------------------------------------


தாய்மையைப் போற்றி வழிபடும் நவராத்திரி

அம்மா என்பது தமிழ் வார்த்தை. அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை என்பது ஒரு பாடல் வரி. குழந்தையின் முதல் வார்த்தை மட்டுமா அம்மா? குழந்தை உருவாகும் கருவறையைத் தாங்கி நிற்பவளும் அந்த அம்மா அல்லவா? அம்மா அதாவது உலக உயிரினங்களுக்கெல்லாம் உற்பத்தித் திருவிடமாக விளங்கும் தாயை இந்துக்களாகிய நாம் இறையுருவில் போற்றி வழிபடுகின்றோம்.
இந்து சமயத்தவர் மத்தியில் தாய்மையை, பெண்மையைப் போற்றும் பண்பு ஆதிமுதல் இருந்து வரும் மரபு. உலக இயக்கத்தின் சக்தியாகத் தாய்மையே விளங்குகின்றது என்பது நமது நம்பிக்கை. அதனால்தான் எல்லாச் சக்திகளுக்கும், இயக்கங்களுக்கும் தாய்மை நிலை தந்து வழிபாடு செய்கின்றோம். வேண்டுதல் செய்கிறோம்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவம் வேண்டுமென்று குரல் கொடுத்து வரும் காலம் இக்காலம். ஆனால், இந்துக்கள் என்றோ சமத்துவத்தைக் கண்டுவிட்டனர். இறை சக்தியாகவே கொண்டுவிட்டனர். கொண்டாடிப் போற்றுகின்றனர். இந்து சமுதாயத்திலே ஆணைவிடப் பெண்ணுக்கு உயர்நிலை வழங்கப்பட்டுள்ளது. ஆதியும், அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியாகிய சிவனின் உருவிலே சரி பாதியாகப் பெண்மையை இணைத்துப் போற்றி நிற்பது நமது மரபு.
இந்துக்களின் சிறப்பு வழிபாட்டுத் தினங்களாகக் கொள்ளப்படும் நன்னாட்களிலே பல்வேறு திருநாமங்களில் தாய்மை வழிபாடு நிகழ்த்தப்பட்டு வருகின்றது.
இத்திரு நாட்களில் புரட்டாதி மாதத்தில் வரும் நவராத்திரி சிறப்புப் பெறுகின்றது. உலகின் இயக்கத்திற்கு அடிப்படையாக அமைவன வீரம், செல்வம், அறிவு ஆகிய மூன்றுமாகும். இம்மூன்று தேவைகளையும் வழங்கும் சக்திகளாகத் துர்க்கை இலட்சுமி, சரஸ்வதி ஆகிய இறை சக்திகளைக் கொள்கின்றோம். மலைமகள், அலை மகள், கலைமகள் என்றும் குறிப்பிடுகின்றோம்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களிலே முதல் மூன்று நாட்களும் வீரத்தின் சக்தியாக விளங்கும் துர்க்காதேவியின் அருள்நாடி வழிபாடு செய்யப்படுகின்றது. துர்க்காதேவி பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கும் சக்தியாகக் கொள்ளப்படுகின்றாள். சமூக நடைமுறைக்கும், ஆட்சியின் சிறப்புக்கும், தனிமனித வாழ்வின் நிறைவிற்கும் உந்து சக்தியாக, இயக்கமாக இருப்பவள் துர்க்கை, துர்க்கை ஒவ்வொரு சக்தியின் வெளிப்பாட்டின் போதும் ஒவ்வொரு திருப்பெயர் பூணுகின்றாள்.
பார்வதி, பரமேஸ்வரி, அம்பிகை, கெளரி, ஜனனி, உமையவள் இவ்வாறு பலதிருநாமங்கள் துர்க்கையம்மனுக்குண்டு. சாந்த சொரூபியாகக் கருணைவினளாகவும், அதர்மத்தை அழிக்கும் அகோர நிலைபூண்டவளாகவும் அன்னையின் திருவுருவம் சித்தரிக்கப்படுகின்றது.
துர்க்கை வழிபாட்டின் மூலம் மனவுறுதி, சக்தி, நிம்மதி, அமைதி, ஆனந்தம், பாதுகாப்பு எல்லாம் கிட்டும். இவற்றை அடைவதற்கு வீரம் வேண்டும். வீரம் என்றால் என்ன? சிந்திப்போம், வீரம் என்றால் உடல் வலிமை மட்டுமா? இல்லை. மனவலிமையும் சேர்ந்ததே வீரம். எதையும் தாங்கும் சக்தி, எப் பிரச்சினையையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் சக்தி அதுவே உள வலிமை. வாழ்வில் நல்லியக்கத்திற்கும், நிம்மதிக்கும் வழிகோலும் சக்தியின் தாயாகத் துர்க்கை விளங்குகிறாள்.
துன்பங்கள், துயரங்கள் நம் உள்ளத்திலே குடிகொண்டு நமது நிம்மதியான வாழ்வைச் சிதைக்காதிருக்க மனவலிமை வேண்டும். அந்த வலிமையைத் தருமாறு அன்னையிடம் வேண்டுதல் செய்யும் புண்ணிய நாட்களாக நவராத்திரி நாட்களின் முதல் மூன்று நாட்களும் விளங்குகின்றன. மனவலிமையென்பது தன்னம்பிக்கையாகும். மனவலிமை இருந்தால் மட்டுமே உடல்வலிமை பயனளிக்கும். மனவலிமை அற்றுவிட்டால் உடல் வலிமையால் பயனில்லை அல்லவா?
மன வலிமையை, எதையும் தாங்கும் சக்தியைப் பெற்று வாழ்வில் எதிர் நீச்சல் போட துர்க்கையம்மனின் திருவடியைச் சரணடைந்தால் பயனும், பலனும் நிச்சயம் உண்டு என்பது நமது நம்பிக்கை. துணிவைத்தரும் துர்க்கை அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலை நிறுத்தும் ஆற்றலின், கருணையின் உறைவிடம் என்பதையும் நாம் உள்ளத்தில் இருத்தி நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்வோம்.
அடுத்துவரும் மூன்று நாட்களும் செல்வத்தின் அதிபதியான அன்னை மகாலட்சுமிக்குரிய நாட்களாகும். செல்வம் என்றால் என்ன? பணம், பொருள், சொத்துக்கள் தான் செல்வம் என்று பலர் எண்ணுகின்றார்கள். மேற் கூறப்பட்டவை செல்வங்களாயினும் நிம்மதி, தேகசுகம், நற்பண்பு, நல்லார் உறவு, நல்லறிவு, குடும்ப உறவு, சமுதாய நல்லுறவு, புத்திரப்பேறு, பாதுகாப்பு, பசி, பட்டினி இன்மை, நாட்டுவளம், இவையெல்லாம் ஒருவருக்கிருக்க வேண்டிய செல்வங்களாகும்.
இவற்றையெல்லாம் வழங்கும் சக்தியாக விளங்குபவள் காக்கும் கடவுளாக நாம்போற்றும் திருமாலின் தேவியான மகாலட்சுமி அன்னையே.
'அருட் செல்வம் செல்வத்துச் செல்வம் பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள' என்பது வள்ளுவர் வாக்கு.
ஒருவர் தவறான வழியிலும் பொருZட்டலாம். செல்வந்தரென்று காட்டிக்கொள்ளலாம். அந்தச் செல்வம் மட்டும் நிலையானது, பெருமை தருவது என்று கூறமுடியாது. மாபெரும் செல்வந்தர்கள் அதாவது பொருட்செல்வம் நிரம்பப் பெற்றவர்களாயிருந்தாலும் மேலேகாட்டப்பட்ட ஏனைய செல்வங்கள் இல்லாவிட்டால் வாழ்வின் பெருமைக்கு, பெறுமதிக்கு முழுமை காண முடியாது.
இயற்கையின் இயக்கமாக இயற்கையின் சொரூபமாக மகாலட்சுமி திகழ்கின்றாள். பூமியைத் தாங்கி நிற்கும் போது பூமாதேவியாகவும், புத்திரப் பேறு வழங்கும் போது சந்தானலட்சுமியாகவும், மனவுறுதி தரும் போது வீர லட்சுமியாகவும், திகழும் அன்னை வெற்றியைத் தரும்போது வஜயலட்சுமியாகவும், தைரியம் தரும்போது தைரியலட்சுமியாகவும், பயிர்கள் செழித்து விளைவைப் பெருக்கும்போது தானிய லட்சுமியாகவும் பொருட் செல்வங்களை வழங்கும் போது தனலட்சுமியாகவும் போற்றப்படுகின்றாள்.
எழுச்சியை வழங்கும் கஜலட்சுமியாகவும் நிம்மதியைத் தரும்போது ஆதிலட்சுமியாகவும் செல்வாக்கைத் தரும் போது ஐஸ்வரியலட்சுமியாகவும் அன்னை விளங்குகின்றாள். இவ்வாறு பத்துத் திருப்பெயர்களுடன் அருள் செய்பவள் அன்னை மகாலட்சுமியே ஆவார்.
நாட்டிலே நல்லமழை பொழிய வேண்டும். விளைநிலம் செழிக்க வேண்டும். பசிபட்டினி இல்லாதொழிய வேண்டும். நல்லாட்சி நாட்டிலே நடக்க வேண்டும். பஞ்சமா பாதகங்கள் உட்பட சகல தீய வினைகளும், நிலைகளும் அகன்று நிம்மதி, அமைதி நிலைக்க வேண்டும். இந்த செல்வநிலை ஓங்க வேண்டும் என்பதே மகாலட்சுமி வழிபாட்டின் நம்பிக்கையாகும்.
நவராத்திரி தினங்களில் இறுதி மூன்று நாட்களும் அறிவின் தெய்வமான சரஸ்வதி தேவிக்குரிய நன்னாட்களாயமைகின்றன. மனித குலத்திடையே சித்தனைத் தெளிவு, சீரியபார்வை, பண்பட்ட நடத்தை போன்றவை மிளிர பகுத்தறிவு பயன்பட வேண்டும்.
மனிதகுலம் சீர்பெற , சிறப்புடன் வாழ கலைகளுக்கெல்லாம் அதிபதியான தேவி அறுபத்து நான்கு கலைகளைத் தந்தருளியுள்ளார். இக்கலைகள் மேன்மையுற்றால் உலகில் தீ¨மைகள் அகன்று நன்மைகள் மேலோங்கிவிடும். உலகம் சிறப்புறும். அறிவு என்பது ஆக்கத்திற்குரியது. அறிவுக்குப் பல விளக்கங்கள் கூறப்பட்டாலும் வாழ்வை வளமுடனும் நலமுடனும் நடத்திச் செல்வதே அறிவின் பெருமைக்குக் கட்டியம் கூறுவதாயமையும். தானும் வாழ்ந்து மற்றவர்களையும் நலமுடன் நிம்மதியாக வாழச் செய்யும் பண்பட்ட மனப்பாங்கே நல்லறிவின் பாங்கு. அதுவே உண்மையான அறிவு.
அறிவின் தெய்வமாகப் போற்றப்படும் கலைமகளின் திருவருளால் சிந்தனைத் தெளிவு, சீரியபார்வை அதனால் நல்வாழ்வு கிட்டும் என்பது இந்துக்களாகிய நமது நம்பிக்கை. மனத்திலே தீய நோக்கங்கள் சிந்தனைகள் அகன்று நல்ல சிந்தனைகளும், நோக்கங்களும் சரஸ்வதிதேவியின் திருவருளால் சித்திக்கும். அன்பு, பண்பு, கருணை, ஒழுக்கம், நீதி, நேர்மை, வாய்மை முதலான நற் சிந்தனைகளால், நற்பண்புகளால் நம்மிதயத்திலே கொலுவேற்றிவிட்டால் விரும்பத்தகாத, வேண்டாத சிந்தனைகள் நம் உள்ளத்திலே புகமுடியாது போய்விடும். சிந்தையைச் சுத்தம் செய்யும் பண்பட்ட வழிபாடு சரஸ்வதி வழிபாடாயமைகிறது. முப்பெருந்தேவியருக்கு விரதமிருந்து அவர்கள் தம் ஆசி வேண்டி வழிபடும் ஒன்பது நாட்கள் நிறைவு பெற்றபின் பத்தாம் நாள் விஜயதசமி கைக்கொள்ளப்படுகின்றது. வெற்றித்திருநாளான மேற்படி நன்னாளில் ஏடுதொடங்கல், புதுத் தொழில் தொடங்கல் போன்ற நல்ல நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. அவரவர் தமக்குரிய தொழில்களில் மேன்மையுற இறைசக்தியான அன்னையரை இத்தினத்திலே வழிபட்டு வேண்டுதல் செய்தல் பயன்தரும்.
காலவெள்ளம் அள்ளிவரும் வேதனைகள் யாவும் அகன்று நீடித்த, நிம்மதியான பெருவாழ்வு சகலருக்கும் கிட்ட வேண்டுமென்று முப்பெருந்தேவியரின் திருவருள் கிட்டும் என்று நம்பிக்கையுடன் எதிர்காலத்தை துணிவுடன் எதிர்கொள்வோம். வெற்றி நிச்சயம் என்று நம்புவோம். நலன் பெறுவோம்.


No comments:

Post a Comment