மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-304
துரோண பர்வம்
….
போரை விட்டோடிய கர்ணன்!
..
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "பீமசேனன், கர்ணனுடன் போரிடுவதில் செயல்பாட்டு ஒருமையுடனும், சக்தியுடனும் வென்றதால், நான் அவனது ஆற்றலை மிக அற்புதமானதாகக் கருதுகிறேன்.(1) உண்மையில், ஓ! சஞ்சயா, யக்ஷர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடிய தேவர்களையே தடுக்க வல்லவனும், அனைத்து வகை ஆயுதங்களையும் தரித்தவனுமான அந்தக் கர்ணனால், சுடர்மிகு பிரகாசத்துடன் கூடியவனும், பாண்டுவின் மகனுமான பீமனைப் போரில் ஏன் வெல்ல முடியவில்லை என்பதை எனக்குச் சொல்வாயாக.(2,3) உயிரையே பணயமாக வைத்த அவர்களுக்குள் அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதைச் சொல்வாயாக. அவ்விருவருக்குள்ளான மோதலில், உண்மையில், இருவருக்கும் வெற்றி அடையத்தக்க தொலைவிலேயே இருக்கிறது, அதே போல இருவரும் தோற்கவும் வாய்ப்பிருக்கிறது [1].(4)
[1] "4ஆம் சுலோகத்தின் இரண்டாம் வரியை மிகச் சாதாரணமாக வழங்கியிருக்கிறேன். இரு மனிதர்கள் போரிடும்போது, எவர் வெல்வார் என்பதை ஒருவனால் முன்கூட்டியே சொல்ல முடியாது. வெல்வதற்கும், தோற்பதற்கு இருவருக்கும் சமமான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதே பொருளாக இங்கே தெரிகிறது" என இங்கே விளக்குகிறார் கங்குலி.
ஓ! சூதா {சஞ்சயா}, போரில் கர்ணனை அடைந்த என் மகன் சுயோதனன் {துரியோதனன்}, கோவிந்தன் {கிருஷ்ணன்} மற்றும் சாத்வதர்களுடன் கூடிய பிருதையின் {குந்தியின்} மகன்களை எப்போதும் வெல்லத் துணிகிறான்.(5) எனினும், பயங்கரச் செயல்களைச் செய்யும் பீமசேனனால் போரில் கர்ணன் அடையும் தொடர் தோல்விகளைக் கேட்டு, எனக்கு மயக்கமே வருவதாகத் தெரிகிறது.(6) என் மகனின் {துரியோதனனின்} தீய கொள்கையின் விளைவால் கௌரவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகவே நான் நினைக்கிறேன். வலிமைமிக்க வில்லாளிகளான பிருதையின் {குந்தியின்} மகன்களை வெல்வதில் கர்ணன் வெற்றி அடையவே மாட்டான்.(7) கர்ணன், பாண்டுவின் மகன்களுடன் போரிட்ட அனைத்துப் போர்களிலும், பின்னவர்களே {பாண்டவர்களே} அவனை {கர்ணனை} எந்த மாற்றமும் இல்லாமல் களத்தில் தோல்வியடையச் செய்திருக்கின்றனர்.(8) உண்மையில் அந்தப் பாண்டவர்கள், ஓ! மகனே {சஞ்சயா}, வாசவனை {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவர்களாவர். ஐயோ, என் தீய மகன் துரியோதனன் இஃதை அறியவில்லையே.(9) கருவூலங்களின் தலைவனை {குபேரனைப்} போல இருக்கும் பிருதையின் {குந்தியின்} மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} செல்வத்தைக் களவாடிய சிறுமதி கொண்ட என் மகன் {துரியோதனன்}, (மலைகளில்) தேனைத் தேடுபவனைப் போல வீழ்ச்சியைக் காணாதிருக்கிறான்.(10) வஞ்சகம் அறிந்த அவன் {துரியோதனன்}, அதைத் திரும்பப் பெற இயலாத அளவுக்குத் தன்னுடையது எனக் கருதி, எபோதும் பாண்டவர்களை அவமதிக்கிறான் [2].(11) தூய்மையற்ற ஆன்மா கொண்ட நானும், உயர் ஆன்ம பாண்டுவின் மகன்கள் அறநெறி நோற்பவர்களாக இருப்பினும், என் பிள்ளைகளின் மீது கொண்ட பாசத்தால் மனவுறுத்தல் கொள்ளவில்லை.(12)
[2] வேறொரு பதிப்பில், "வஞ்சனையில் புத்தியுள்ளவனான என் புத்திரன் மகாத்மாக்களான பாண்டவர்களுடைய ராஜ்யத்தைக் கபடத்தால் கவர்ந்து கொண்டு, "ஜயம் அடையப்பட்டது" என்றே எண்ணிக் கொண்டு பாண்டவர்களை அவமதிக்கிறான்" என்றிருக்கிறது.
பெரும் தொலைநோக்குப் பார்வை கொண்டவனும், பிருதையின் மகனுமான யுதிஷ்டிரன், சமாதானத்தை விரும்புபவனாகவே தன்னை எப்போதும் காட்டிக் கொண்டான். எனினும் என் மகன்கள் அவனைத் {யுதிஷ்டிரனைத்} திறனற்றவனாகக் கருதி, அவனை இகழ்ந்தனர்.(13) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமசேனன், அந்தத் துயரங்கள் அனைத்தையும் (பாண்டவர்களால் தாக்குப்பிடிக்கப்பட்ட) தீங்குகள் அனைத்தையும் மனத்தில் கொண்டு, சூதன் மகனுடன் {கர்ணனுடன்} போரிட்டான்.(14) எனவே, ஓ! சஞ்சயா, போர்வீரர்களில் முதன்மையான பீமன் மற்றும் கர்ணன் ஆகிய இருவரும், ஒருவர் உயிரை மற்றவர் எடுக்க விரும்பி, தங்களுக்குள் எவ்வாறு போரிட்டனர் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(15)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்றையொன்று கொல்லவிரும்பிய இரண்டு காட்டு யானைகளுக்கு ஒப்பாகக் கர்ணனுக்கும், பீமனுக்கும் இடையிலான போர் எவ்வாறு நடந்தது என்பதைக் கேட்பீராக.(16) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட விகர்த்தனன் மகன் {கர்ணன்}, தன் ஆற்றலை முன்னெடுத்து, எதிரிகளைத் தண்டிப்பவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான கோபக்கார பீமனை முப்பது கணைகளால் துளைத்தான்.(17) உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த விகர்த்தனன் மகன் {கர்ணன்}, கூர்முனை கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பெரும் வேகம் கொண்டவையுமான கணைகள் பலவற்றால் பீமனைத் தாக்கினான்.(18) எனினும், பீமன், தன்னைத் தாக்குவதில் கர்ணன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மூன்று கணைகளால் பின்னவனின் {கர்ணனின்} வில்லை அறுத்தான். மேலும் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஒரு பல்லத்தைக் கொண்டு கர்ணனின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து கீழே பூமியில் விழ வைத்தான்.(19)
அப்போது, பீமனைக் கொல்ல விரும்பிய விகர்த்தனன் மகன், தங்கம் மற்றும் வைடூரியக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட ஈட்டி ஒன்றை ஏந்தினான்.(20) காலனின் இரண்டாவது ஈட்டியைப் போல இருந்த அந்தக் கடும் ஈட்டியைப் பிடித்து உயர்த்திக் குறி பார்த்த ராதையின் மகன் {கர்ணன்}, பீமனின் உயிரை எடுக்கப் போதுமான பலத்துடன் அதைப் பீமசேனன் மீது ஏவினான். பெரும்பலம் கொண்ட அந்த ராதையின் மகன் {கர்ணன்}, வஜ்ரத்தை {இடியை} ஏவும் இந்திரனைப் போல அந்த ஈட்டியை ஏவி பெருமுழக்கம் செய்தான். அம்முழக்கத்தைக் கேட்ட உமது மகன்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(21-23) எனினும் பீமன், கர்ணனின் கரங்களில் இருந்து வீசப்பட்டதும், நெருப்பு, அல்லது சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதுமான அவ்வீட்டியை ஏழு கணைகளைக் கொண்டு ஆகாயத்திலேயே வெட்டினான்.(24) அப்போதுதான் சட்டையுரிந்து வந்த பாம்புக்கு ஒப்பான அவ்வீட்டியை வெட்டிய பீமன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனுடைய உயிரை எடுக்கப் பார்ப்பவனைப் போலப் பெரும் கோபத்துடன் அந்தப் போரில், மயிலின் இறகுகள் மற்றும் தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், ஒவ்வொன்றும் யமனின் கோலுக்கு ஒப்பானவையுமான பல கணைகளை ஏவினான்.(25, 26)
பெரும் சக்தியைக் கொண்ட கர்ணனும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்ட மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்டு, அதைப் பலத்துடன் வளைத்துக் கணைகள் பலவற்றை ஏவினான்.(27) எனினும், பாண்டுவின் மகன் {பீமன்}, ஒன்பது நேரான கணைகளால் அக்கணைகள் அனைத்தையும் வெட்டினான். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, வசுசேனனால் {கர்ணனால்} ஏவப்பட்ட அந்த வலிமைமிக்கக் கணைகளை வெட்டிய பீமன், ஓ! ஏகாதிபதி, ஒரு சிங்கத்தைப் போலப் பெருமுழக்கம் செய்தான். பருவ காலத்தில் பசுவுக்காக முழங்கும் வலிமைமிக்க இரு காளைகளைப் போல, அல்லது ஒரே இறைச்சித் துண்டுக்காக முழங்கும் இரு புலிகளைப் போல, அடுத்தவனின் மட்டுமீறிய தாமதத்தைக் காண விரும்பி அவர்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(28-30) சில நேரங்களில் அவர்கள் மாட்டுக் கொட்டகையிலுள்ள இரு வலிமைமிக்கக் காளைகளைப் போல ஒருவரையொருவர் கோபக் கண்களால் பார்த்துக் கொண்டனர். பிறகு இரு பெரும் யானைகள் தங்கள் தந்தங்களின் கூர்முனைகளைக் கொண்டு ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போல, முழுதாக வளைத்து இழுக்கப்பட்ட தங்கள் வில்லில் இருந்து கணைகளை ஏவி ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் கணை மாரியால் ஒருவரையொருவர் எரித்த அவர்கள், பெரும் கோபத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, ஒருவரின் மேலொருவர் தங்கள் ஆற்றலைச் செலுத்தினர். (31,32) சிலநேரங்களில் ஒருவரை நோக்கி ஒருவர் சிரித்துக் கொண்டும், சில நேரங்களில் ஒருவரையொருவர் நிந்தித்துக் கொண்டும், சில நேரங்களில் தங்கள் சங்குகளை முழங்கிக் கொண்டும் அவர்கள் ஒருவரோடொருவர் போர் புரிந்தனர்.(33)
அப்போது பீமன், கர்ணனின் வில்லைக் கைப்பிடியில் அறுத்து, சங்கு போன்ற வெண்மையாக இருந்த பின்னவனின் {கர்ணனின்} குதிரைகளைத் தன் கணைகளின் மூலம் யமனுலகு அனுப்பினான்.(34) மேலும் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் எதிரியின் {கர்ணனின்} தேரோட்டியையும் அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான். பிறகு, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாக ஆக்கப்பட்டு, அந்தப் போரில் (கணைகளால்) மறைக்கப்பட்டிருந்த விகர்த்தனன் மகன் கர்ணன், பெரும் துன்பத்தில் மூழ்கினான். பீமனின் கணைமாரியால் மலைத்துப் போன அவன் {கர்ணன்}, என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(35, 36)
துன்பம் நிறைந்த அவல நிலையில் கர்ணன் நிறுத்தப்பட்டதைக் கண்ட மன்னன் துரியோதனன், கோபத்தால் நடுங்கி, (தன் தம்பியான) துர்ஜயனிடம், "ஓ! துர்ஜயா, செல்வாயாக. அங்கே அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ராதையின் மகனை {கர்ணனை} விழுங்கப் போகிறான். அந்தத் தாடியற்ற அலியை {பீமனை} விரைவாகக் கொன்று, கர்ணனை வலுப்படுத்துவாயாக" என்றான்.(37, 38) இப்படிச் சொல்லப்பட்ட உமது மகன் துர்ஜயன், துரியோதனனிடம், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி (கர்ணனுடன்) போரில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த பீமசேனனை நோக்கி விரைந்து கணைகளால் அவனை {பீமனை} மறைத்தான்.(39) அந்தத் துர்ஜயன், பீமனை ஒன்பது கணைகளாலும், அவனது குதிரைகளை எட்டாலும், அவனது சாரதியை ஆறாலும், அவனது கொடிமரத்தை மூன்றாலும் தாக்கி, மீண்டும் பீமனை ஏழாலும் {ஏழு கணைகளாலும்} தாக்கினான்.(40)
அப்போது, கோபத்தால் தூண்டப்பட்ட பீமசேனன், தன் கணைகளால் துர்ஜயனின் உயிர் நிலைகளையும், அவனது குதிரைகளையும், சாரதியையும் துளைத்து, அவர்களை யமனுலகு அனுப்பி வைத்தான் [3].(41) அப்போது துயரால் அழுத கர்ணன், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், பாம்பைப் போல நெளிந்தபடி பூமியில் கிடந்த அந்த உமது மகனை {துர்ஜயனை} வலம்வந்தான்.(42) பீமன், தனது கொடிய எதிரியான கர்ணனைத் தேரற்றவனாகச் செய்த பிறகு, சிரித்துக் கொண்டே கணைகளால் அவனை மறைத்து, எண்ணற்ற கூர்முனைகளைக் கொண்ட சதாக்னியைப் போல அவனை ஆக்கினான்.(43) எனினும், எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த அதிரதன் கர்ணன், இப்படிக் கணைகளால் துளைக்கப்பட்டிருந்தாலும், அந்தப் போரில் தன்னுடன் போரிடும் பீமனைத் தவிர்க்கவில்லை" {என்றான் சஞ்சயன்}.(44)
[3] இந்தத் துர்ஜயனோடு சேர்த்து, இதுவரை பீமன், துரியோதனன் தம்பிகளில் 36 பேரைக் கொன்றிருக்கிறான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பீமனால் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டவனான தேரற்ற கர்ணன், மற்றொரு தேரில் ஏறிக் கொண்டு, பாண்டுவின் மகனை {பீமனை} வேகமாகத் துளைக்க ஆரம்பித்தான். (1) தங்கள் தந்தங்களால் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் இரு பெரும் யானைகளைப் போல அவர்கள், முழுதாக வளைத்து இழுக்கப்பட்ட தங்கள் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(2) அப்போது கணைப்பொழிவால் பீமனைத் தாக்கி பெருமுழக்கம் செய்த கர்ணன், மீண்டும் அவனை {பீமனை} மார்பில் தாக்கினான்.(3) எனினும் பதிலுக்குப் பீமன், பத்து நேரான கணைகளால் கர்ணனைத் தாக்கி, மீண்டும் அவனை {கர்ணனை} இருபது நேரான கணைகளால் தாக்கினான்.(4) பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணன் ஒன்பது கணைகளால் பீமனின் நடுமார்பைத் துளைத்து, ஒரு கூரிய கணையால் பின்னவனின் {பீமனின்} கொடிமரத்தையும் தாக்கினான்.(5) பதிலுக்குப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் பீமன்}, வலிமைமிக்க யானையை அங்குசத்தால் தாக்கும் பாகனைப் போல, அல்லது குதிரையைச் சாட்டையால் தாக்கும் சாரதியைப் போலக் கர்ணனை அறுபத்து மூன்று {63} கணைகளால் துளைத்தான்.(6)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {பீமனால்} ஆழத்துளைக்கப்பட்ட வீரக் கர்ணன், நாவால் தன் கடைவாயை நனைத்து, சினத்தால் கண்கள் சிவந்தான்.(7) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணன், வஜ்ரத்தை ஏவும் இந்திரனைப் போல, பீமசேனனின் அழிவுக்காக அனைத்தையும் துளைக்கவல்ல ஒரு கணையை அவன் {பீமன்} மீது ஏவினான்.(8) அழகிய இறகுகளைக் கொண்டதும், சூதன் மகனின் {கர்ணனின்} வில்லில் இருந்து ஏவப்பட்டதுமான அந்தக் கணை, அந்தப் போரில் பார்த்தனை {பீமனைத்} துளைத்துச் சென்று பூமிக்குள் ஆழ மூழ்கியது.(9)
அப்போது கோபத்தால் கண்கள் சிவந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன் ஒருக்கணமும் சிந்தியாமல், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், முழுதாக நான்கு முழம் நீளம் கொண்டதும், சக்தியில் இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பானதும், ஆறு பக்கங்களைக் கொண்டதுமான கனமிக்க ஒரு கதாயுதத்தை அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} மீது வீசினான். உண்மையில், இந்திரன் தன் வஜ்ரத்தால் அசுரர்களைக் கொல்வதைப் போலக் கோபத்தால் தூண்டப்பட்ட அந்தப் பாரதக் குலத்துக் காளை {பீமன்}, நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையும், முதன்மையான இனத்தைச் சேர்ந்தவையுமான அதிரதன் மகனின் {கர்ணனின்} குதிரைகளை அக்கதாயுதத்தாலேயே கொன்றான். பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், க்ஷுரப்ரங்கள் இரண்டைக் கொண்டு கர்ணனின் கொடிமரத்தை அறுத்தான்.(10-12) பிறகு அவன் {பீமன்}, பெரும் எண்ணிக்கையிலான கணைகளைக் கொண்டு தன் எதிரியின் {கர்ணனின்} தேரோட்டியைக் கொன்றான். குதிரைகளற்ற, சாரதியற்ற, கொடிமரமற்ற அந்தத் தேரைக் கைவிட்ட கர்ணன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியற்ற நிலையிலேயே தன் வில்லை வளைத்தபடி பூமியில் நின்றான். தேரை இழந்தாலும் தொடர்ந்து எதிரியைத் தடுத்த அந்த ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} நாங்கள் கண்ட ஆற்றலானது மிக அற்புதமானதாக இருந்தது.(13-14)
மனிதர்களில் முதன்மையான அந்த அதிரதன் மகன் {கர்ணன்} தேரிழந்து இருப்பதைக் கண்ட துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (தன் தம்பியான) துர்முகனிடம், "ஓ! துர்முகா, ராதையின் மகன் {கர்ணன்}, பீமசேனனால் தன் தேரை இழந்திருக்கிறான்.(15-16) ஓ! பாரதா {துர்முகா} அந்த வலிமைமிக்கத் தேர்வீரனுக்கு {கர்ணனுக்கு} ஒரு தேரை அளிப்பாயாக" என்றான். துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் துர்முகன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}(17), கர்ணனை நோக்கி வேகமாக விரைந்து, தன் கணைகளால் பீமனை மறைத்தான். அந்தப் போரில் துர்முகன், சூதனின் மகனை ஆதரிக்க விரும்புவதைக் கண்ட(18) வாயு தேவனின் மகன் {பீமன்} மகிழ்ச்சியால் நிறைந்து தன் கடைவாயை {நாவால்} நனைக்கத் தொடங்கினான். பிறகு தன் கணைகளால் சிறிது நேரம் கர்ணனைத் தடுத்த(19) அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, விரைவாகத் துர்முகனை நோக்கித் தன் தேரைச் செலுத்தினான். அக்கணத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூர் முனை கொண்ட ஒன்பது நேரான(20) கணைகளால் பீமன் துர்முகனை யமலோகம் அனுப்பிவைத்தான் [1].
[1] சேனாதிபதி, ஜலசந்தன், சுஷேணன் {?}, உக்கிரன், வீரபாகு, பீமன், பீமரதன், சுலோசனன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 64ல் 4ம் நாள் போரிலும், சுநாபன், ஆதித்யகேது, பஹ்வாசி, குண்டதாரன், மஹோதரன், அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 89ல் 8ம் நாள் போரிலும், வியுதோரோஷ்கன், அநாதிருஷ்டி, குண்டபேதின் {?}, விராஜன், தீர்கலோசனன் {தீப்தலோசனன்}, தீர்க்கபாகு, சுபாகு, கன்யாகத்யஜன் {மகரத்வஜன்}, ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 97ல் அதே 8ம் நாள் போரிலும், குண்டபேதி {?}, சுஷேணன் {?}, தீர்க்கநேத்திரன், பிருந்தாரகன், அபயன், ரௌத்ரகர்மன், துர்விமோசனன், விந்தன், அனுவிந்தன், சுவர்மன், சுதர்சன் ஆகிய 11 பேரை துரோண பர்வம் பகுதி 126ல் 14ம் நாள் போரிலும், துர்ஜயன் என்று ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 132ல் அதே 14ம் நாள் போரிலும், துர்முகன் என்ற ஒருவனைத் துரோணபர்வத்தின் இந்தப் பகுதியில் அதே 14ம் நாள் போரிலும் கொன்றிருப்பதோடு சேர்த்தால், பீமன் இதுவரை திருதராஷ்டிரன் மகன்களில் 37 பேரைக் கொன்றிருக்கிறான். {?} என்ற அடைப்புக்குறிகளுக்குள் மீண்டும் கூறப்பட்ட பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.
துர்முகன் கொல்லப்பட்டதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இளவரசனின் {துர்முகனின்} தேரில் ஏறிய அதிரதன் மகன் {கர்ணன்} சூரியனைப் போலச் சுடர்விட்டபடி பிரகாசமாகத் தெரிந்தான். (கணைகளால்) தன் முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு, குருதியால் குளித்த மேனியுடன் களத்தில் கிடக்கும் துர்முகனைக் கண்ட கர்ணன், கண்ணீர் நிறைந்த கண்களுடன் போரிடுவதிலிருந்து ஒருக்கணம் விலகினான். வீழ்ந்த அந்த இளவரசனை {துர்முகனை} வலம்வந்து, அவனை {துர்முகனை} அங்கேயே விட்ட(21-23) வீரக் கர்ணன், நீண்ட நெடிய அனல்மூச்சுகளை விட்டு {அடுத்து} என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கழுகின் இறகுகளைக் கொண்ட பதினான்கு {14} நாராசங்களைச் சூதனின் மகன் {கர்ணன்} மீது ஏவினான். தங்கச் சிறகுள் மற்றும் பெரும் சக்தி ஆகியவற்றைக் கொண்டனவும், குருதியைக் குடிப்பனவுமான அக்கணைகள், பத்து திசைப்புள்ளிகளுக்கும் ஒளியூட்டியபடியே ஆகாயத்தில் பறந்து சென்று சூதன் மகனின் {கர்ணனின்} கவசத்தைத் துளைத்து அவனது உயிர்க்குருதியைக் குடித்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},(24-26) காலனால் ஏவப்பட்டுப் பொந்துக்குள் தங்கள் பாதி உடல்கள் நுழைந்த நிலையிலிருக்கும் கோபக்காரப் பாம்புகளைப் போல, ஓ! ஏகாதிபதி, அவை {அந்தக் கணைகள்} அவனது உடலை ஊடுருவி பூமிக்குள் மூழ்கிப் பிரகாசமாகத் தெரிந்தன.(27)
அப்போது அந்த ராதையின் மகன் {கர்ணன்} ஒருக்கணமும் சிந்தியாமல், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பதினான்கு கடுங்கணைகளால் பதிலுக்குப் பீமனைத் துளைத்தான். கடும் சிறகுகளைக் கொண்ட அந்தக் கணைகள் பீமனின் வலக்கரத்தைத் துளைத்தபடி(28, 29) மரத்தோப்புக்குள் நுழையும் பறவைகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. பூமியைத் அக்கணைகள், அஸ்த மலைகளுக்குச் செல்லும் சூரியனின் சுடர்மிக்கக் கதிர்களைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தன.(30) அந்தப் போரில் அனைத்தையும் துளைக்கவல்ல அக்கணைகளால் துளைக்கப்பட்ட பீமன்(31), நீரோடைகளை வெளியிடும் ஒரு மலையைப் போல அபரிமிதமான இரத்த ஓடைகளைச் சிந்தத் தொடங்கினான். பிறகு பீமன் கருடனின் வேகத்தைக் கொண்ட மூன்று கணைகளால் சூதன் மகனை {கர்ணனைப்} பதிலுக்குத் துளைத்து, மேலும் பின்னவனின் {கர்ணனின்} தேரோட்டியையும் ஏழு கணைகளால் துளைத்தான்.
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனின் வலிமையால் இப்படிப் பீடிக்கப்பட்ட கர்ணன், மிகவும் துன்புற்றவனானான்.(32-33) பிறகு அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரன் {கர்ணன்}, போரைக் கைவிட்டு, வேகமான தன் குதிரைகளால் சுமக்கப்பட்டுத் தப்பி ஓடினான் [2]. எனினும், அதிரதனான பீமன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் வில்லை வளைத்தபடியே அந்தப் போரில் நிலைத்து, சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்" {என்றான் சஞ்சயன்}(34)
[2] வேறொரு பதிப்பில், "பீமனுடைய அம்புகளால் அடிக்கப்பட்டுத் தளர்ச்சியடைந்தவனான அந்தக் கர்ணன் வேகமுள்ள குதிரைகளோடு பெரும்பயத்தினால் யுத்தரங்கத்தைவிட்டு ஓடினான்" என்றிருக்கிறது.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "விதியே உயர்ந்தது என நான் நினைக்கிறேன். அதிரதன் மகன் {கர்ணன்} தீர்மானத்துடன் போரிட்டாலும், பாண்டுவின் மகனை {பீமனை} வெல்ல முடியாததால், அந்தப் பயனற்ற முயற்சிக்கு ஐயோ.(1) கோவிந்தனோடு {கிருஷ்ணனோடு} கூடிய பார்த்தர்கள் அனைவரையும் போரில் வெல்லத்தக்கவனாகக் கர்ணன் தற்புகழ்ச்சி செய்கிறான். "கர்ணனைப் போன்ற மற்றொரு போர்வீரனை இவ்வுலகில் நான் கண்டதில்லை" என்று துரியோதனன் பேசுவதை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். (2)
உண்மையில், ஓ! சூதா {சஞ்சயா}, முன்னர்த் துரியோதனன் என்னிடம், "கர்ணன், வலிமைமிக்க வீரனும், உறுதிமிக்க வில்லாளியும், களைப்பனைத்திற்கும் அப்பாற்பட்டவனுமாவான். அந்த வசுசேனனை {கர்ணனை} நான் என் கூட்டாளியாகக் கொண்டால், தேவர்களே எனக்கு ஈடாகமாட்டார்கள் எனும்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பலவீனமானவர்களும், கொடூரர்களுமான பாண்டுவின் மகன்களைக் குறித்து என்ன சொல்ல வேண்டும்?" என்று {துரியோதனன்} சொல்வது வழக்கம். எனவே, ஓ! சஞ்சயா, தோற்கடிக்கப்பட்டு, விஷத்தை இழந்த பாம்பைப் போலத் தெரிந்த கர்ணன், போரில் இருந்து ஓடியதைக் கண்ட துரியோதனன் என்ன சொன்னான் என்பதை எனக்குச் சொல்வாயாக. ஐயோ, உணர்வுகளை இழந்தவனான துரியோதனன், சுடர்மிக்க நெருப்புக்குள் அனுப்பப்படும் ஒரு பூச்சியைப் போல, போரை அதிகம் அறியாதவனும், உதவியற்றவனுமான துர்முகனை அந்தப் பயங்கர மோதலுக்குள் அனுப்பினானே.
ஓ! சஞ்சயா, அஸ்வத்தாமன், மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, கிருபர் ஆகியோர் ஒன்றுசேர்ந்தாலும், பீமசேனனின் எதிரே நிற்க முடியாதே. பத்தாயிரம் {10000} யானைகளுக்கு இணையான பயங்கர வலிமை மற்றும் மருத்தனின் சக்தி ஆகியவற்றைக் கொண்ட பீமனையும், அவனது கொடூர நோக்கங்களையும் அவர்களும் {அஸ்வத்தாமன், சல்லியன் மற்றும் கிருபர் ஆகியோரும்} அறிவார்கள். பீமனின் வலிமை, கோபம், சக்தி ஆகியவற்றை அறிந்த அந்தப் போர் வீரர்கள், யுக முடிவில் தோன்றும் யமனுக்கு ஒப்பானவனும், கொடூர செயல்களைச் செய்பவனுமான அந்த வீரனின் {பீமனின்} கோபத்தைத் தூண்டுவார்களா? சூதனின் மகனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான கர்ணன் மட்டுமே, தன் கரங்களின் ஆற்றலை நம்பி, பீமசேனனை அலட்சியமாகக் கருதி அவனுடன் போரிட்டதாகத் தெரிகிறது.(3-10)
புரந்தரன் {இந்திரன்} ஓர் அசுரனை வென்றதைப் போலக் கர்ணனைப் போரில் வென்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, போரில் வேறு எவராலும் வெல்லப்பட முடியாதவனாகவே இருக்கிறான். துரோணரையே கலங்கடித்து, அர்ஜுனனைத் தேடி என் படைக்குள் தனியாக நுழைந்த அந்தப் பீமனை, உயிர்வாழும் நம்பிக்கை கொண்ட எவன் அணுகுவான்? உண்மையில், ஓ! சஞ்சயா, பீமனின் முகத்துக்கு நேராக நிற்கும் துணிவு கொண்ட வேறு எவன் இருக்கிறான்?(11-13) கையில் உயர்த்தப்பட்ட வஜ்ரத்துடன் கூடிய பெரும் இந்திரனின் முன்பு நிற்க அசுரர்களில் எவன் துணிவான்? [1] ஒரு மனிதன், இறந்தவர்களின் மன்னனுடைய {யமனின்} வசிப்பிடத்தில் நுழைந்த பிறகும் திரும்பலாம்.(14) ஆயினும், எவனாலும் பீமசேனனிடம் மோதிவிட்டு திரும்ப முடியாது. பலவீனமான ஆற்றலுடனும், அறிவில்லாமலும், கோபக்கார பீமசேனனை எதிர்த்துச் செல்வோர் சுடர்மிக்க நெருப்பில் விழும் பூச்சிகளைப் போன்றவராவர்.
[1] "இரு மொழிகளின் மாண்புகளும் முற்றிலும் வேறாக இருப்பதால், பதினாலாம் சுலோகத்தின் முதல் வரியின் பொருளை, பதிமூன்றாம் சுலோகத்தின் இரண்டாம் பாதியுடன் உறுதியான வடிவத்தில் இணைக்க முயலாமல் தனியாகவே கொடுத்திருக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், "சஞ்சய, வஜ்ராயுதத்தைக் கையில் பிடித்த மகேந்திரனுக்கு எதிரில் அசுரன் போலப் பீமனுக்கெதிரில் எவன் நிற்க சக்தியுள்ளவன்?" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரிலும் மேற்கண்ட பதிப்பில் உள்ளதைப் போலவே உள்ளது.
கோபமும், மூர்க்கமும் கொண்ட பீமன், என் மகன்களைக் கொல்வது குறித்துக் குருக்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே சபையில் சொன்னதை நினைவுகூர்ந்தும், கர்ணனின் தோல்வியைக் கண்டும், அச்சத்தாலேயே துச்சாசனனும், அவனது தம்பிகளும் பீமனுடன் மோதவில்லை என்பதில் ஐயமில்லை.(15-17) ஓ! சஞ்சயா, "கர்ணனும், துச்சாசனனும், நானும் போரில் பாண்டவர்களை வெல்வோம்" என்று (இவ்வார்த்தைகளை) மீண்டும் மீண்டும் சபையில் சொன்ன அந்த என் தீய மகன் {துரியோதனன்}, கிருஷ்ணனுக்குப் பொருத்தமானதை [2] மறுத்ததன் விளைவால், பீமனால் கர்ணன் வீழ்த்தப்பட்டதையும், அவனது தேரை இழக்கச் செய்ததையும் கண்டு துயரால் எரிக்கப்படுகிறான் என்பதில் ஐயமில்லை.(18, 19) கவசம்பூண்ட தனது தம்பிகள், தன் குற்றத்தின் விளைவால் போரில் பீமசேனனால் கொல்லப்படுவதைக் கண்டு, என் மகன் {துரியோதனன்} துயரால் எரிகிறான் என்பதில் ஐயமில்லை.(20)
[2] உண்மையில், "கிருஷ்ணனை அவமதித்ததால்" என்பதே இங்கே பொருளாகும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், "மதிகேடனும், கௌரவச் சபையில் 'கர்ணனும், துச்சாசனனும், நானும் யுத்தத்தில் பாண்டவர்களை ஜயிப்போம்' என்று அடிக்கடி சொன்னவனுமான என்னுடைய இழிகுணமுள்ள புதல்வன், பீமனாலே கர்ணன் தோல்வியடைவிக்கப்பபட்டு ரதத்தை இழந்ததைக் கண்டும் (முன்பு தான்) கிருஷ்ணனை அவமதித்ததை நினைத்தும் நிச்சயமாக மிகுந்த மன வருத்தத்தை அடைவான்" என்றிருக்கிறது.
கோபத்தால் தூண்டப்பட்டவனும், பயங்கர ஆயுதங்களைத் தரித்தவனும், போரில் காலனைப் போலவே நிற்பவனும், பாண்டுவின் மகனுமான பீமனை உயிரில் விருப்பமுள்ள எவன்தான் பகைமையுடன் எதிர்த்துச் செல்வான்?(21) வடவாக்னியின் கோரப்பற்களுக்கிடையில் இருந்து ஒரு மனிதன் தப்பிவிடலாம், ஆனால், பீமனின் முகத்துக்கு எதிரில் இருந்து எவனாலும் தப்ப முடியாது என்றே நான் நம்புகிறேன்.(23) உண்மையில், பார்த்தனோ, பாஞ்சாலர்களோ, கேசவனோ, சாத்யகியோ போரில் கோபத்தால் தூண்டப்படும்போது, அவர்கள் (தங்கள்) உயிரைக் குறித்துக் கிஞ்சிற்றும் கவலை கொள்வதில்லை. ஐயோ, ஓ! சூதா {சஞ்சயா} என் மகன்களின் உயிர்கள் ஆபத்தில் இருக்கின்றவே" என்றான் {திருதராஷ்டிரன்}.(24)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, தற்போதைய பேரழிவைக் கருத்தில் கொண்டு இப்படித் துயருறும் நீரே இவ்வுலகத்தின் அழிவுக்கான வேர் {காரணம்} என்பதில் ஐயமில்லை.(25) உமது மகன்களின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்த நீரே இந்தக் கடும் பகைமையைத் தூண்டியவராவீர். (நலம் விரும்பும் நண்பர்களால்) தூண்டப்பட்டாலும், மரணமடைய விதிக்கப்பட்ட மனிதனைப் போல உகந்த மருந்தை நீர் ஏற்க மறுத்தீர்.(26) ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, செரிக்கப்பட முடியாத மிகக் கடுமையான நஞ்சைப் பருகிய நீர், இப்போது அதன் விளைவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வீராக.(27) போராளிகள் தங்களால் முடிந்த வரை சக்தியுடன் போரிடுகின்றனர்; இருப்பினும் அவர்களை நீர் நிந்திக்கிறீரே. எனினும், போர் எவ்வாறு நடந்தது என்பதை விளக்கிச் சொல்கிறேன் கேளும்.(28)
ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் கர்ணன் வீழ்த்தப்பட்டதைக் கண்டவர்களும், பெரும் வில்லாளிகளும், உடன் பிறந்தவர்களுமான உமது ஐந்து மகன்களால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(29) அவர்கள், துர்மர்ஷணன், துஸ்ஸஹன், துர்மதன், துர்த்தரன், ஜயன் ஆவர். அழகிய கவசங்களைப் பூண்டிருந்த அவர்கள் அனைவரும் பாண்டுவின் மகனை எதிர்த்து விரைந்தனர்.(30) அனைத்துப் பக்கங்களிலும் விருகோதரனை {பீமனைச்} சூழ்ந்து கொண்ட அவர்கள், வெட்டுக்கிளிகளின் கூட்டங்களைப் போலத் தெரிந்த தங்கள் கணைகளால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தனர்.(31) எனினும், பீமன் அந்தப் போரில் இப்படித் திடீரெனத் தன்னை எதிர்த்து விரைபவர்களும், தெய்வீக அழகுடையவர்களுமான அந்த இளவரசர்களைச் சிரித்துக் கொண்டே வரவேற்றான்.(32)
பீமசேனனை எதிர்த்து முன்னேறும் உமது மகன்களைக் கண்டவனும், ராதையின் மகனுமான கர்ணன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், கூர் முனை கொண்டவையுமான கணைகளை ஏவியபடியே அந்த வலிமைமிக்கப் போர்வீரனை {பீமனை} எதிர்த்து விரைந்தான்.(33) பீமன், உமது மகன்களால் தடுக்கப்பட்டாலும் கர்ணனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(34) பிறகு கர்ணனைச் சூழ்ந்து கொண்ட குருக்கள் {கௌரவர்கள்}, நேரான கணைகளின் மழையால் பீமசேனனை மறைத்தனர்.(35) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உறுதிமிக்க வில்லைத் தரித்திருந்த பீமன், மனிதர்களில் காளையரான அவர்கள் அனைவரையும், அவர்களது, குதிரைகள் மற்றும் தேரோட்டிகளுடன் சேர்த்து இருபத்தைந்து {25} கணைகளால் யமனுலகுக்கு அனுப்பி வைத்தான் [3].(36) தங்கள் தேரோட்டிகளுடன் தங்கள் தேர்களில் இருந்து விழுந்த அவர்களது உயிரற்ற வடிவங்கள் {உடல்கள்}, சூறாவளியால் வேருடன் சாய்க்கப்பட்டவையும், பல்வேறு நிறங்களிலான கனமான மலர்களுடன் கூடியவையுமான பெரிய மரங்களைப் போலத் தெரிந்தன.(37)
[3] சேனாதிபதி, ஜலசந்தன், சுஷேணன் {?}, உக்கிரன், வீரபாகு, பீமன், பீமரதன், சுலோசனன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 64ல் 4ம் நாள் போரிலும், சுநாபன், ஆதித்யகேது, பஹ்வாசி, குண்டதாரன், மஹோதரன், அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 89ல் 8ம் நாள் போரிலும், வியுதோரோஷ்கன், அநாதிருஷ்டி, குண்டபேதின் {?}, விராஜன், தீர்கலோசனன் {தீப்தலோசனன்}, தீர்க்கபாகு, சுபாகு, கன்யாகத்யஜன் {மகரத்வஜன்}, ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 97ல் அதே 8ம் நாள் போரிலும், குண்டபேதி {?}, சுஷேணன் {?}, தீர்க்கநேத்திரன், பிருந்தாரகன், அபயன், ரௌத்ரகர்மன், துர்விமோசனன், விந்தன், அனுவிந்தன், சுவர்மன், சுதர்சன் ஆகிய 11 பேரை துரோண பர்வம் பகுதி 126ல் 14ம் நாள் போரிலும், துர்ஜயன் என்று ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 132ல் அதே 14ம் நாள் போரிலும், துர்முகன் என்ற ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 133ல் அதே 14ம் நாள் போரிலும், துர்மர்ஷணன், துஸ்ஸஹன், துர்மதன், துர்த்தரன், ஜயன் ஆகிய ஐவரை இப்போது இந்தப் பதிவில் {துரோண பர்வம் பகுதி 134ல்} அதே 14ம் நாள் போரில் கொன்றிருப்பதோடு சேர்த்தால், பீமன் இதுவரை திருதராஷ்டிரன் மகன்களில் 42 பேரைக் கொன்றிருக்கிறான். {?} என்ற அடைப்புக்குறிகளுக்குள் மீண்டும் கூறப்பட்ட பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.
அதிரதன் மகனை {கர்ணனைத்} தடுத்துக் கொண்டே உமது மகன்களைக் கொன்ற பீமசேனனின் ஆற்றலை நாங்கள் மிக அற்புதமானதாகக் கண்டோம்.(38) கூரிய கணைகளைக் கொண்டு பீமனால் அனைத்துப் பக்கங்களிலும் தடுக்கப்பட்ட சூதனின் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனைப் பார்க்க மட்டுமே செய்தான்.(39) கோபத்தால் கண்கள் சிவந்த பீமசேனனும், உறுதிமிக்கத் தன் வில்லை வளைத்தபடியே கர்ணனின் மீது தன் கோபப் பார்வைகளைச் செலுத்தத் தொடங்கினான்" {என்றான் சஞ்சயன்}.(40)
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்
No comments:
Post a Comment