Wednesday, January 10, 2024

Mahabharatam in tamil 305

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-305
துரோண பர்வம்
….
விகர்ணனுக்காக மிகவும் வருந்திய பீமன்!
..
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "உமது மகன்கள் (களத்தில்) நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைக் கண்டு, பெரும் ஆற்றலைக் கொண்ட கர்ணன், பெரும் கோபத்தால் நிறைந்து, தன் உயிரில் நம்பிக்கையற்றவனானான்.(1) அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, பீமனால் தன் கண்களுக்கு எதிரிலேயே போரில் கொல்லப்பட்ட உமது மகன்களைக் கண்டு தன்னையே குற்றவாளியாகக் கருதினான்.(2) அப்போது பீமசேனன், முன்னர்க் கர்ணனால் இழைக்கப்பட்ட தீமைகளை நினைவுகூர்ந்து, சினத்தால் நிறைந்து, திட்டமிட்ட கவனத்தோடு {பாதுகாப்போடு} கூரிய கணைகள் பலவற்றால் கர்ணனைத் துளைக்கத் தொடங்கினான்.(3)
பிறகு கர்ணன், சிரித்துக் கொண்டே ஐந்து கணைகளால் பீமனைத் துளைத்து, தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான எழுபது கணைகளால் மீண்டும் அவனை {பீமனைத்} துளைத்தான்.(4) கர்ணனால் ஏவப்பட்ட அக்கணைகளை அலட்சியம் செய்த விருகோதரன் {பீமன்}, நேரான ஒரு நூறு {100} கணைகளால் அந்தப் போரில் ராதையின் மகனை {கர்ணனைத்} துளைத்தான்.(5) மீண்டும் ஐந்து கூரிய கணைகளால் அவனது முக்கிய அங்கங்களைத் துளைத்த பீமன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஒரு பல்லத்தைக் கொண்டு அந்தச் சூத மகனின் {கர்ணனின்} வில்லை அறுத்தான்.(6) பிறகு மகிழ்ச்சியற்றவனான கர்ணன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, தன் கணைகளால் அனைத்துப் பக்கங்களிலும் பீமசேனனை மறைத்தான்.(7)
அப்போது பீமன், கர்ணனின் குதிரைகள் மற்றும் தேரோட்டியைக் கொன்று, இப்படியே கர்ணனின் அருஞ்செயல்களுக்கு எதிர்வினையாற்றி உரத்த சிரிப்பொன்றைச் சிரித்தான்.(8) பிறகு மனிதர்களில் காளையான அந்தப் பீமன், தன் கணைகளால் கர்ணனின் வில்லை அறுத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உரத்த நாணொலி கொண்டதும், கைப்பிடியில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்த வில்லானது (அவனது {கர்ணனின்} கரங்களில் இருந்து) கீழே விழுந்தது.(9) அப்போது வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன் தன் தேரில் இருந்து இறங்கி அந்தப் போரில் ஒரு கதாயுதத்தை எடுத்து, அதைப் பீமனின் மீது கோபத்துடன் வீசினான்.(10) ஓ மன்னா, தன்னை நோக்கி வேகமாக வரும் அந்தக் கதாயுதத்தைக் கண்ட விருகோதரன் {பீமன்}, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதைத் தன் கணைகளால் தடுத்தான்.(11)
பிறகு, பெரும் ஆற்றலைக் கொடையாகக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, சூதன் மகனின் {கர்ணனின்} உயிரை எடுக்க விரும்பி, பெரும் சுறுசுறுப்புடன் முயன்று, பின்னவன் {கர்ணன்} மீது ஓராயிரம் கணைகளை ஏவினான்.(12) எனினும் கர்ணன், அந்தப் போரில், அந்தக் கணைகள் அனைத்தையும் தடுத்து, தன் கணைகளால் பீமனின் கவசத்தை அறுத்தான்.(13) பிறகு அவன் {கர்ணன்}, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இருபத்தைந்து குறுங்கணைகளால் பீமனைத் துளைத்தான். இவை யாவும் காண மிக அற்புதமாக இருந்தன.(14) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட பீமன், ஒன்பது நேரான கணைகளை அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} மீது ஏவினான்.(15) கர்ணனின் கவசத்தையும், வலக்கரத்தையும் துளைத்துச் சென்ற அந்தக் கூரிய கணைகள், எறும்புப் புற்றுக்குள் நுழையும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. (16) பீமசேனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைமாரியால் மறைக்கப்பட்ட கர்ணன், மீண்டும் பீமசேனனிடம் புறமுதுகிட்டான்.(17)
சூதனின் மகன் {கர்ணன்} புறமுதுகிடுவதையும், குந்தியின் மகனுடைய {பீமனின்} கணைகளால் எங்கும் மறைக்கப்பட்டுக் காலாளாக ஓடுவதையும் கண்ட துரியோதனன்,(18) {தன் தம்பிகளிடம்} "ராதையின் மகனுடைய {கர்ணனின்} தேரை நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்து விரைந்து செல்வீராக" என்றான். பிறகு, ஓ! மன்னா, தங்கள் அண்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியமடைந்த உமது மகன்கள், கணை மாரியை ஏவியபடியே போரில் பாண்டுவின் மகனை {பீமனை} நோக்கி விரைந்தனர்.(19) அவர்கள் {துரியோதனனின் அந்தத் தம்பிகள்}, சித்ரன், உபசித்ரன், சித்ராக்ஷன் [1], சாருசித்ரன், சராஸனன், சித்ராயுதன், சித்ரவர்மன் ஆகியோராவர். அவர்கள் அனைவரும் போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்தவர்களாக இருந்தனர். எனினும், வலிமைமிக்கத் தேர்வீரனான பீமசேனன், இப்படித் தன்னை எதிர்த்து விரைந்து வரும் அந்த உமது மகன்கள் ஒவ்வொருவரையும் ஒரே கணையால் {ஒவ்வொரு கணைகளால்} வீழ்த்தினான். உயிரை இழந்த அவர்கள், சூறாவளியால் வேரோடு சாய்க்கப்பட்ட மரங்களைப் போலக் கீழே பூமியில் விழுந்தனர் [2].(20-22)
[1] கங்குலியின் பதிப்பில் இப்பெயர் விடுபட்டிருக்கிறது. வேறொரு பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இப்பெயர் இடம்பெற்றிருக்கிறது.
[2] சென்ற பதிவின் அடிக்குறிப்பு [3]ல், போர் தொடங்கிய நாளில் இருந்து, துரியோதனின் தம்பிகளில் 42 பேரைப் பீமன் கொன்றிருப்பதாகக் கண்டோம். இப்போது இந்தப்பதிவில் கொல்லப்பட்ட சித்ரன், உபசித்ரன், சித்ராக்ஷன், சாருசித்ரன், சராஸனன், சித்ராயுதன், சித்ரவர்மன் ஆகிய எழுவரைச் சேர்த்து இதுவரை பீமன், திருதராஷ்டிரன் மகன்களில் 49 பேரைக் கொன்றிருக்கிறான்.
வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்த உமது மகன்கள் அனைவரும் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அழுகை நிறைந்த முகத்துடன், விதுரனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.(23) முறையான சாதனங்களுடன் கூடிய மற்றொரு தேரில் ஏறியவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான கர்ணன், போரில் பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்து வேகமாகச் சென்றான்.(24) தங்கச் சிறகுகளுடன் கூடிய கூரிய கணைகளால் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்ட அவ்விரு வீரர்களும், சூரியனின் கதிர்கள் ஊடுருவிய இரு மேகத் திரள்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(25)
அப்போது சினத்தால் தூண்டப்பட்ட பாண்டுவின் மகன் {பீமன்}, பெரும் கூர்மை மற்றும் கடும் சக்தியைக் கொண்ட முப்பத்தாறு {36} பல்லங்களால் சூதன் மகனின் {கர்ணனின்} கவசத்தை அறுத்தான்.(26) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சூதனின் மகனும் {கர்ணனும்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஐம்பது நேரான கணைகளால் குந்தியின் மகனை {பீமனைத்} துளைத்தான்.(27) செஞ்சந்தனக் குழம்பைத் தங்கள் மேனியில் பூசியிருந்த அவ்விரு வீரர்களும், கணைகளால் ஒருவருக்கொருவர் பல காயங்களை உண்டாக்கி சிந்திய குருதியால் மறைக்கப்பட்டு, உதயச் சூரியனையும், சந்திரனையும் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(28) கணைகளால் அறுக்கப்பட்ட கவசங்களுடன் தங்கள் உடல்கள் குருதியால் மறைக்கப்பட்டிருந்த கர்ணனும், பீமனும், தங்கள் சட்டைகளில் இருந்து அப்போதுதான் விடுபட்ட இரு பாம்புகளைப் போலத் தெரிந்தனர்.(29) உண்மையில், தங்கள் பற்களால் ஒன்றையொன்று சிதைத்துக் கொள்ளும் இரு புலிகளைப் போல மனிதர்களில் புலிகளான அவ்விருவரும், தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர். மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகத் திரள்களைப் போல அவ்விரு வீரர்களும் தங்கள் கணைகளை இடையறாமல் பொழிந்தனர்.(30)
எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், தங்கள் தந்த முனைகளால் ஒன்றையொன்று கிழித்துக் கொள்ளும் இரு யானைகளைப் போலத் தங்கள் கணைகளால் தங்கள் ஒவ்வொருவரின் உடல்களையும் கிழித்துக் கொண்டனர்.(31) ஒருவரை நோக்கி ஒருவர் முழங்கி தங்கள் கணைகளை ஒருவர் மேல் ஒருவர் பொழிந்த முதன்மையான அவ்விரு தேர்வீரர்களும், தங்கள் தேர்களைக் கொண்டு வட்டங்களாலான அழகிய தடங்களை உண்டாக்கச் செய்து ஒருவரோடொருவர் விளையாடுவதாகத் தெரிந்தது.(32) அவர்கள், பருவகாலத்தில் உள்ள பசுவின் முன்னிலையில் ஒன்றை நோக்கி ஒன்று முழங்கும் வலிமைமிக்க இரு காளைகளுக்கு ஒப்பாக இருந்தனர். உண்மையில், மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவரும், பெரும் ஆற்றலைக் கொண்ட வலிமைமிக்க இரு சிங்களைப் போலவே தெரிந்தனர்.(33) கோபத்தால் சிவந்த தங்கள் கண்களால் ஒருவரையொருவர் நோக்கியவர்களும், பெரும் சக்தியைக் கொண்டவர்களுமான அவ்விரு போர்வீரர்களும், சக்ரனையும் {இந்திரனையும்}, விரோசனன் மகனையும் {பிரகலாதனையும்} போலப் போரிட்டனர்.(34)
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், வில்லைத் தன்னிரு கரங்களால் வளைத்தபோது, மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகம் ஒன்றைப் போலவே தெரிந்தான்.(35) பிறகு வில்லின் நாணொலியைத் தன் இடியொலியாகவும், இடையறாத கணை மாரியைத் தன் மழைப்பொழிவாகவும் கொண்ட அந்த வலிமைமிக்கப் பீம மேகம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கர்ண மலையை மறைத்தது.(36) பயங்கர ஆற்றலைக் கொண்டவனும் பாண்டுவின் மகனுமான அந்தப் பீமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மீண்டும் ஒரு முறை தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட ஓராயிரம் கணைகளால் கர்ணனை மறைத்தான்.(37) கங்க இறகுகளால் அமைந்த சிறகுகளைக் கொண்ட கணைகளைக் கொண்டு அவன் {பீமன்} கர்ணனை மறைத்த போது, உமது மகன்கள் இயல்புக்கு மீறிய அவனது ஆற்றலைக் கண்டனர்.(38)
பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, சிறப்புமிக்கக் கேசவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, சாத்யகிக்கும், (அர்ஜுனன் தேருடைய இரண்டு) சக்கரங்களைப் பாதுகாப்பவர்களான இருவருக்கும் (யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகியோருக்கும்) மகிழ்ச்சியை ஊட்டியபடி, இப்படியே பீமன் கர்ணனுடன் போரிட்டான்.(39) பீமனின் ஆற்றல், கரங்களின் வலிமை, விடாமுயற்சி ஆகியவற்றை அறிந்தவர்களான உமது மகன்கள் அனைவரும் மகிழ்ச்சியற்றவர்களானார்கள்" {என்றான் சஞ்சயன்}.(40)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பீமசேனனுடைய வில்லின் நாணொலியையும், அவனது உள்ளங்கையொலிகளையும் கேட்டு, மதங்கொண்ட எதிராளியின் முழக்கங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத மற்றொரு மதங்கொண்ட யானையைப்போல ராதையின் மகனால் {கர்ணனால்} அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(1) பீமசேனனின் முன்னிலையில் இருந்து ஒரு கணம் அகன்ற கர்ணன், பீமசேனனால் கொல்லப்பட்ட உமது மகன்களின் மீது கண்களைச் செலுத்தினான்.(2) ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே} அவர்களைக் கண்ட கர்ணன் உற்சாகத்தை இழந்து துயரில் மூழ்கினான். நெடிய பெரும் அனல் மூச்சுகளைவிட்ட அவன் {கர்ணன்}, மீண்டும் பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்துச் சென்றான்.(3)
தாமிரம் போன்ற சிவந்த கண்களுடன், வலிமைமிக்கப் பாம்பொன்றைப் போலக் கோபத்தில் பெருமூச்சுவிட்ட கர்ணன் தன் கணைகளை ஏவிய போது, கதிர்களை இறைக்கும் சூரியனைப் போலவே மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.(4) உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சூரியனில் இருந்து பரவும் கதிர்களுக்கு ஒப்பாகக் கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் விருகோதரன் {பீமன்} மறைக்கப்பட்டான்.(5) மயிலின் இறகுகளைக் கொண்ட அந்த அழகிய கணைகள், கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டு, உறங்குவதற்காக மரத்திற்குள் நுழையும் பறவைகளைப் போல, பீமனுடைய உடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஊடுருவின.(6)
உண்மையில், தங்கச் சிறகுகளைக் கொண்ட அந்தக் கணைகள், கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டு, நாரைகளின் தொடர்ச்சியான வரிசைகளுக்கு ஒப்பாக இடையறாமல் பாய்ந்தன.(7) அதிரதன் மகனால் ஏவப்பட்ட கணைகள் ஒரு வில்லில் இருந்து மட்டும் வெளியேறுவதாகத் தெரியாமல், கொடிமரம், குடை, ஏர்க்கால், நுகத்தடி மற்றும் தேர்த்தட்டு ஆகியவற்றில் இருந்தும் பாய்வதைப் போலத் தெரியும் அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் இருந்தன.(8) உண்மையில், அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, மூர்க்கமான சக்தி கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், கழுகின் இறகுகளைக் கொண்டவையுமானத் தன் வானுலாவும் கணைகளால் மொத்த ஆகாயத்தையும் நிறைக்கும் வகையில் அவற்றை ஏவினான்.(9)
(இப்படி) வெறியால் தூண்டப்பட்டு, காலனைப் போலத் தன்னை நோக்கி விரைந்து வரும் அவனை {கர்ணனைக்} கண்ட விருகோதரன் {பீமன்}, தன் உயிரைக் குறித்து முற்றிலும் கவலைப்படாமல், தன் எதிரியிலும் மேன்மையடைந்து ஒன்பது கணைகளால் அவனைத் {கர்ணனைத்} துளைத்தான்.(10) கர்ணனின் தடுக்கப்பட முடியாத மூர்க்கத்தையும், அந்த அடர்த்தியான கணைமழையையும் கண்ட பீமன், பெரும் ஆற்றலைக் கொண்டவனாதலால், அச்சத்தால் நடுங்கவில்லை.(11)
பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அதிரதன் மகனின் {கர்ணனின்} கணைப்பொழிவுக்கு எதிர்வினையாக, இருபது கூரிய கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.(12) உண்மையில், பிருதையின் மகன் {பீமன்} முன்னர்ச் சூதனின் மகனால் {கர்ணனால்} எப்படி மறைக்கப்பட்டானோ, அதே போலவே பின்னவன் {கர்ணன்} இப்போது அந்தப் போரில் முன்னவனால் {பீமனால்} மறைக்கப்பட்டான்.(13) போரில் பீமசேனனின் ஆற்றலைக் கண்ட உமது போர்வீரர்களும், சாரணர்களும் கூட மகிழ்ச்சியால் நிறைந்து அவனைப் புகழ்ந்தனர்.(14) கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பிலிருந்தும், பூரிஸ்ரவஸ், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, ஜெயத்ரதன், உத்தமௌஜஸ், யுதாமன்யு, சாத்யகி, கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனன்(15) ஆகிய இந்தப் பெரும் தேர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, "நன்று, நன்று" என்று சொல்லி சிங்க முழக்கம் செய்தனர்.(16)
மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் அந்தக் கடுமுழுக்கம் எழுந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகனான துரியோதனன், மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரிடமும், குறிப்பாகத் தன்னுடன் பிறந்த தம்பிகளிடம் இவ்வார்த்தைகளை விரைவாகச் சொன்னான். "அருளப்பட்டிருப்பீராக, விருகோதரனிடம் {பீமனிடமிருந்து} இருந்து கர்ணனைக் காப்பதற்காக அவனிடம் {கர்ணனிடம்} விரைவீராக, இல்லையெனில், பீமனின் வில்லில் இருந்து ஏவப்படும் கணைகளே ராதையின் மகனை {கர்ணனைக்} கொன்றுவிடும். வலிமைமிக்க வில்லாளிகளே சூதனின் மகனை {கர்ணனைக்} காக்க முயல்வீராக" {என்றான் துரியோதனன்}.(17-19).
இப்படித் துரியோதனனால் கட்டளையிடப்பட்டதும், அவனது {துரியோதனனின்} தம்பியரில் எழுவர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கோபத்தில் பீமசேனனை நோக்கி விரைந்து, அனைத்துப் பக்கங்களிலும் அவனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டனர்.(20) குந்தியின் மகனை அணுகிய அவர்கள், மழைக்காலங்களில் மலையின் சாரலில் மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமாரிகளால் அவனை {பீமனை} மறைத்தனர்.(21) கோபத்தில் தூண்டப்பட்டவர்களான அந்தப் பெரும் தேர்வீரர்கள் எழுவரும், ஓ! மன்னா, பிரளயத்தின் போது சந்திரனைப் பீடிக்கும் ஏழு கோள்களைப் போலப் பீமசேனனைப் பீடிக்கத் தொடங்கினர்.(22)
அப்போது குந்தியின் மகன் {பீமன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் அழகிய வில்லைப் பெரும்பலத்துடன் வளைத்து, அதை உறுதியாகப் பிடித்து,(23) தன் எதிரிகளும் மனிதர்கள்தான் என்பதை அறிந்து, ஏழு கணைகளைக் குறி பார்த்தான். பெருஞ்சினத்துடன் கூடிய அந்தத் தலைவன் பீமன், சூரியக் கதிர்களைப் போன்ற அந்தப் பிரகாசமான கணைகளை அவர்கள் மீது ஏவினான்.(24) உண்மையில், முந்தைய தீங்குகளை நினைவுகூர்ந்த பீமசேனன், உமது மகன்களான அவர்களின் உடல்களில் இருந்து உயிரைப் பிரித்தெடுக்கும் வகையில் அந்தக் கணைகளை ஏவினான்.(25)
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அந்தக் கணைகள், பீமசேனனால் ஏவப்பட்டு, அந்தப் பாரத இளவரசர்களின் உடல்களைத் துளைத்து வானத்தில் பறந்து சென்றன.(26) உண்மையில், தங்கச் சிறகுகளைக் கொண்ட அந்தக் கணைகள், உமது மகன்களின் இதயங்களைத் துளைத்து ஆகாயத்தில் சென்ற போது, சிறந்த இறகுகளைக் கொண்ட பறவைகளைப் போல அழகாகத் தெரிந்தன.(27) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, குருதியால் எங்கும் நனைந்திருந்த அக்கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் குருதியைக் குடித்த பிறகு, அவர்களின் உடலைக் கடந்து சென்றன.(28) அந்தக் கணைகளால் முக்கிய உறுப்புகள் துளைக்கப்பட்ட அவர்கள், மலைகளின் செங்குத்துப் பாறைகளில் வளரும் நெடிய மரங்கள் யானைகளால் முறிக்கப்பட்டதைப் போலத் தங்கள் தேர்களில் இருந்து கீழே பூமியில் விழுந்தனர்.(29) இப்படிக் கொல்லப்பட்ட உமது ஏழு மகன்கள், சத்ருஞ்சயன், சத்ருஸஹன், சித்ரன், சித்ராயுதன். த்ருடன், சித்ரசேனன், விகர்ணன் ஆகியோராவர் [1].(30)
[1] சேனாதிபதி, ஜலசந்தன், சுஷேணன் {?}, உக்கிரன், வீரபாகு, பீமன், பீமரதன், சுலோசனன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 64ல் 4ம் நாள் போரிலும், சுநாபன், ஆதித்யகேது, பஹ்வாசி, குண்டதாரன், மஹோதரன், அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 89ல் 8ம் நாள் போரிலும், வியுதோரோஷ்கன், அநாதிருஷ்டி, குண்டபேதின் {?}, விராஜன், தீர்கலோசனன் {தீப்தலோசனன்}, தீர்க்கபாகு, சுபாகு, கன்யாகத்யஜன் {மகரத்வஜன்}, ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 97ல் அதே 8ம் நாள் போரிலும், குண்டபேதி {?}, சுஷேணன் {?}, தீர்க்கநேத்திரன், பிருந்தாரகன், அபயன், ரௌத்ரகர்மன், துர்விமோசனன், விந்தன், அனுவிந்தன், சுவர்மன், சுதர்சன் ஆகிய 11 பேரை துரோண பர்வம் பகுதி 126ல் 14ம் நாள் போரிலும், துர்ஜயன் என்று ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 132ல் அதே 14ம் நாள் போரிலும், துர்முகன் என்ற ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 133ல் அதே 14ம் நாள் போரிலும், துர்மர்ஷணன், துஸ்ஸஹன், துர்மதன், துர்த்தரன், ஜயன் ஆகிய ஐவரை துரோண பர்வம் பகுதி 134ல் அதே 14ம் நாள் போரிலும், சித்ரன், உபசித்ரன், சித்ராக்ஷன், சாருசித்ரன், சராஸனன், சித்ராயுதன், சித்ரவர்மன் ஆகிய எழுவரை துரோண பர்வம் பகுதி 135ல் அதே 14ம் நாள் போரிலும், சத்ருஞ்சயன், சத்ருஸஹன், சித்ரன், சித்ராயுதன். த்ருடன், சித்ரசேனன், விகர்ணன் ஆகிய எழுவரை இப்போது இந்தத் துரோண பர்வம் பகுதி 136ல் அதே 14ம் நாள் போரில் கொன்றிருப்பதோடு சேர்த்தால், பீமன் இதுவரை திருதராஷ்டிரன் மகன்களில் 56 பேரைக் கொன்றிருக்கிறான். இந்தப் பதினான்காம் நாள் போரில் மட்டும் இதுவரை 32 பேரைக் கொன்றிருக்கிறான்
பாண்டுவின் மகனான விருகோதரன் {பீமன்}, இப்படிக் கொல்லப்பட்ட உமது மகன்கள் அனைவரிலும், தன் அன்புக்குரிய விகர்ணனுக்காக வருந்தி, கடும் துக்கத்தை அடைந்தான்.(31) அந்தப் பீமன், "போரில் என்னால் நீங்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்று இப்படியே என்னால் சபதமேற்கப்பட்டது. ஓ! விகர்ணா, அதற்காகவே, நீயும் கொல்லப்படலாயிற்று. {இங்கே} என் சபதமே நிறைவேற்றப்பட்டதாயிற்று.(32) ஓ! வீரா {விகர்ணா}, ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை மனதில் தாங்கியே நீ போரிட வந்தாய். எங்களுக்கு, அதிலும் குறிப்பாக மன்னனுக்கு (எங்கள் அண்ணனுக்கு) {யுதிஷ்டிரனுக்கு} நன்மை செய்வதில் நீ எப்போதும் ஈடுபட்டு வந்தாய்.(33) எனவே, ஒப்பற்றவனான உனக்காக நான் வருந்துவது முறையாதல் அரிதே {முறையாகாது}" என்றான் {பீமன்} [2].
[2] வேறொரு பதிப்பில், "விகர்ணா, என்னால் இந்தப் பிரதிஜ்ஞை செய்யப்பட்டது யுத்தத்தில் நீங்கள் கொல்லப்படத் தக்கவர்களல்லரோ? ஆதலால், நீ கொல்லப்பட்டாய். என்னால் பிரதிஜ்ஞை காக்கப்பட்டது. வீரனே, க்ஷத்திரிய தர்மத்தை நினைத்துக் கொண்டு நீ யுத்தத்திற்கு வந்தாய். ஆதலால், யுத்தகளத்தில் நீ கொல்லப்பட்டாய். யுத்தமுறையானது கொடியதன்றோ? எங்களுடைய நன்மையிலும், விசேஷமாக (எங்கள்) அரசருடைய நன்மையிலும் பற்றுள்ளவனும், அதிகத் தேஜஸையுடையவனுமான விகர்ணன் நியாயத்தினாலோ அநியாயத்தினாலோ அடிக்கப்பட்டுப் படுத்திருக்கிறான். ஆழ்ந்த புத்தியுள்ளவரும் பூமியில் பிருகஸ்பதிக்குச் சமமானவரும், காங்காபுத்ரருமான பீஷ்மரும் யுத்தத்தில் பிராணனையிழக்கும்படி செய்விக்கப்பட்டார். ஆதலால் யுத்தமானது கொடியதன்றோ?" என்று கூறினான்" என இருக்கிறது.
அவ்விளவரசர்களைக் கொன்ற பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ராதையின் மகன் {கர்ணன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} பயங்கரமான சிங்கமுழக்கம் ஒன்றைச் செய்தான்.(34) வீரப் பீமனின் அந்தப் பெருங்கூச்சலானது, ஓ! பாரதரே, அந்தப் போரில் அவனது வெற்றியை நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்குத் தெரிவித்தது. உண்மையில், வில் தரித்த அந்தப் பீமனின் மகத்தான கூச்சலைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் போருக்கு மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.(35, 36) மகிழ்ச்சியடைந்த அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} பிறகு, ஓ! மன்னா, தன் தம்பியின் சிங்க முழக்கத்தை, துந்துபிகள் மற்றும் பிற இசைக்கருவிகளின் ஒலிகளோடு வரவேற்றான். ஏற்றுக் கொள்ளப்பட்ட குறியீட்டடின்படி விருகோதரன் {பீமன்} அந்தச் செய்தியை அனுப்பிய பிறகு, ஆயுதங்களை அறிந்தோரில் முதன்மையான அந்த யுதிஷ்டிரன், மகிழ்ச்சியால் நிறைந்து போரில் துரோணரை எதிர்த்து விரைந்தான்.
மறுபுறம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் முப்பத்தொருவர் [3] கொல்லப்பட்டதைக் கண்ட துரியோதனன், "விதுரர் பேசிய நன்மையான வார்த்தைகள் இப்போது உணரப்படுகின்றன" என்று விதுரரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.(37-40) இப்படி நினைத்த மன்னன் துரியோதனனால் தான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய முடியவில்லை. பகடையாட்டத்தின் போது, மூடனும், தீயவனுமான உமது மகன் {துரியோதனன்}, (தன் பக்கத்தில் இருந்த) கர்ணனுடன் சேர்ந்து, பாஞ்சால இளவரசியை {திரௌபதியைச்} சபைக்கு அழைத்துவரச் செய்து, அவளிடம் பேசியதும், அதே இடத்தில் உமது முன்னிலையில்(41, 42) கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, "ஓ! கிருஷ்ணையே {திரௌபதியே}, பாண்டவர்கள் தொலைந்தனர், அவர்கள் நிலையான நரகத்திற்குள் மூழ்கிவிட்டனர். எனவே நீ வேறு கணவர்களைத் தேர்ந்தெடுப்பாயாக" என்ற அளவுக்குக் கர்ணனால் பேசப்பட்ட கடும் வார்த்தைகளும், ஐயோ, அவை அனைத்தின் கனியும் {பலனும்} இப்போது வெளிப்படுகின்றன.(43, 44)
[3] 14ம் நாள் போரில் மட்டும் பீமசேனனால் கொல்லப்பட்டவர்கள் 32 பேராவர். மேலே முப்பத்தொன்று என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. துர்முகன், துர்ஜயன் இருவரும் ஒருவராக இருப்பின் கணக்குச் சரியாகவே வரும். கொல்லப்பட்டோரின் பெயர் விபரங்களை அறிய இதே பதிவின் அடிக்குறிப்பு [1] ஐ காணவும்.
மேலும், ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, கோபம் நிறைந்த உமது மகன்கள், அந்த உயர் ஆன்மா கொண்டோரான பாண்டுவின் மகன்களிடம் எள்ளுப்பதர்கள் போன்ற பல்வேறு கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினர். (இப்படி விளைந்த) கோப நெருப்பைப் பதிமூன்று {13} வருடங்கள் தடுத்திருந்த பீமசேனன் இப்போது அதை {கோப நெருப்பைக்} கக்கியபடியே, உமது மகன்களுக்கு அழிவை ஏற்படுத்துகிறான்.(45-46) ஏராளமாகப் புலம்பிய விதுரர், சமாதானத்தை நோக்கி உம்மை இட்டுச் செல்வதில் தவறினார். ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அவை அனைத்தின் கனியையும் உமது மகன்களுடன் சேர்ந்து அனுபவிப்பீராக.(47) நீர் முதியவராகவும், பொறுமையுள்ளவராகவும், அனைத்துச் செயல்களின் விளைவுகளை முன்னறியவல்லவராகவும் இருக்கிறீர். அப்படியிருந்தும், நீர் உமது நலன்விரும்பிகளின் ஆலோசனைகளைப் பின்பற்ற மறுத்ததால், இவையாவும் விதியின் பயன் என்றே தெரிகிறது.(48) ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே} வருந்தாதீர். இவையாவும் உமது பெரும் தவறால் விளைந்தவையே. உமது மகன்களின் அழிவுக்கு நீரே காரணமாவீர் என்பதே எனது கருத்தாகும்.(49)
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விகர்ணனும், பெரும் ஆற்றலைக் கொண்ட சித்திரசேனனும் வீழ்ந்துவிட்டனர். உமது மகன்களில் முதன்மையான பல வலிமைமிக்கத் தேர்வீரர்களும் கூட வீழ்ந்துவிட்டனர்.(50) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, பீமன், தன் பார்வை செல்லும் தொலைவில் வந்த உமது பிற மகன்களையும் விரைவாகக் கொன்றான்.(51) பாண்டுவின் மகனான பீமனாலும், விருஷனாலும் (கர்ணனாலும்) ஏவப்பட்ட கணைகளால் நமது படையில் ஆயிரக்கணக்கானோர் எரிக்கப்படுவதை உம்மால் மட்டுமே நான் காண நேர்ந்தது" {என்றான் சஞ்சயன்}.(52)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சூதா, ஓ! சஞ்சயா, இந்தத் துன்பகரமான விளைவு, நிச்சயமாக என் தீய கொள்கையின் காரணமாக எங்களை அடைந்தது என்றே நான் நினைக்கிறேன்.(1) நடந்தது நடந்ததுதான் என்றே இதுவரை நான் நினைத்து வந்தேன். ஆனால், ஓ! சஞ்சயா, இப்போது நான் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?[1](2) ஓ சஞ்சயா, நான் மீண்டும் அமைதியை அடைகிறேன். எனவே, என் தீய கொள்கைகளைக் காரணமாகக் கொண்ட இந்த வீரர்களின் படுகொலை எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றன என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றான்.(3)
[1] வேறொரு பதிப்பில், "அந்த அநீதியானது இப்போது பலித்துவிட்டதென்று நான் நினைக்கிறேன். சஞ்சய, சென்றது சென்றதேயென்று என் மனத்தில் உறுதியுண்டாகிவிட்டது" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "இதுவரை நடந்ததெல்லாம் நன்மைக்கே என்றே நான் நினைத்தேன். ஆனால், ஓ! சஞ்சயா, இப்போது எந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவோ அவையே பின்பற்றப்பட வேண்டும்" என்று இருக்கிறது. இப்படி மூன்று பதிப்புகளும் மூன்று விதமாகச் சொல்கின்றன.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்டவர்களான கர்ணன் மற்றும் பீமன் ஆகிய இருவரும் மழை நிறைந்த இரு மேகங்களைப் போலத் தங்கள் கணைமாரிகளைப் பொழிவதைத் தொடர்ந்தனர்(4) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், பீமனின் பெயர் பொறிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள் கர்ணனை அணுகி, அவனது உயிரையே துளைத்துவிடுவன போல, அவனது உடலுக்குள் ஊடுருவின.(5) அதே போல அந்தப் போரில் பீமனும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் இருந்தவையுமான கர்ணனின் கணைகளால் மறைக்கப்பட்டான்.(6) அவர்களது கணைகளை அனைத்துப் பக்கங்களிலும் பாயும் வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெருங்கடலுக்கு ஒப்பாகத் துருப்புகளுக்கு மத்தியில் கலக்கம் உண்டானது.(7) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பாகப் பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் உமது படையின் போராளிகளில் பலர் உயிரை இழந்தனர்.(8)
மனிதர்களின் உடல்களோடு கலந்து விழுந்து கிடந்த யானைகள், குதிரைகள் ஆகியவற்றால் பரவிக் கிடந்த போர்க்களமானது, சூறாவளியால் முறிக்கப்பட்ட மரங்கள் சிதறிக் கிடக்கும் ஒரு பாதையைப் போலத் தெரிந்தது.(9) பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் போரில் கொல்லப்பட்ட உமது போர்வீரர்கள், "இஃது என்ன?" என்று சொன்னபடியே தப்பி ஓடினர்.(10) உண்மையில், சிந்துக்கள், சௌவீரர்கள், கௌரவர்கள் ஆகியோரைக் கொண்ட அந்தப் படை, கர்ணன் மற்றும் பீமன் ஆகிய இருவரின் மூர்க்கமான கணைகளாலும் பீடிக்கப்பட்டு, பெரும் தொலைவிற்கு அகற்றப்பட்டனர்.(11) துணிச்சல்மிக்க அந்தப் படைவீரர்களில் எஞ்சியோரும், தங்கள் குதிரைகள் மற்றும் யானைகள் கொல்லப்பட்டு, கர்ணன் மற்றும் பீமன் ஆகிய இருவரின் அருகாமையை விட்டகன்று, அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(12) (மேலும் அவர்கள்), "பீமன் மற்றும் கர்ணன் ஆகிய இருவரால் ஏவப்பட்ட கணைகளும் நம் படைகளையே கொல்வதால், உண்மையில், பார்த்தர்களுக்காகத் தேவர்களே நம்மை மலைக்கச் செய்கின்றனர்" என்றனர்.(13) இவ்வார்த்தைகளைச் சொன்ன உமது துருப்பினர், அச்சத்தால் பீடிக்கப்பட்டு (கர்ணன் மற்றும் பீமன் ஆகியோரின்) கணைகள் அடையும் தொலைவைத் தவிர்த்து, வெகுதொலைவில் இருந்து அந்த மோதலைக் கண்டனர்.(14)
அப்போது, வீரர்களின் மகிழ்ச்சியையும், மருண்டோரின் அச்சத்தையும் அதிகரிக்கும் வகையில் அந்தப் போர்க்களத்தில் ஒரு பயங்கர ஆறு பாயத் தொடங்கியது.(15) மேலும் அது யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் குருதியால் உண்டானதாக இருந்தது. மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் உயிரற்ற உடல்கள்,(16) கொடிக்கம்பங்கள், தேர்த்தட்டுகள் {இருசுக்கட்டைகள்} ஆகியவற்றாலும், தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் அலங்காரப் பொருட்கள், உடைந்து போன தேர்கள், சக்கரங்கள், அக்ஷங்கள் {அச்சுகள்}, கூபரங்கள் {ஏர்க்கால்கள்}(17) ஆகியவற்றாலும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பெரும் நாணொலி கொண்டவையுமான விற்கள், கர்ணன் மற்றும் பீமனால் ஏவப்பட்டவையும், சட்டையுதிர்த்த பாம்புகளுக்கு ஒப்பானவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான ஆயிரக்கணக்கான கணைகள், நாராசங்கள், எண்ணற்ற வேல்கள், ஈட்டிகள், கத்திகள், போர்க்கோடரிகள்,(18,19) கதாயுதங்கள், தண்டங்கள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கோடரிகள், பல்வேறு வடிவங்களிலான தண்டங்கள், ஈட்டிகள், பரிகங்கள்,(20), அழகிய சதாக்னிகள் ஆகியவற்றாலும் மறைக்கப்பட்டுப் பூமியானது பிரகாசமாகத் தெரிந்தது. தங்கத்தாலான காது குண்டலங்கள், ஆரங்கள், (மணிக்கட்டுகளில் இருந்து) தளர்ந்து விழுந்த கைவளைகள், வளையங்கள், கிரீடங்களில் அணியப்படும் மதிப்புமிக்க ரத்தினங்கள், தலைப்பாகைகள், தலைக்கவசங்கள், பல்வேறு வகைகளிலான தங்க ஆபரணங்கள், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, கவசங்கள், தோலுறைகள், யானைகளின் கயிறுகள், (தங்கள் நிலைகளில் இருந்து தவறிய) குடைகள், சாமரங்கள், விசிறிகள், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் துளைக்கப்பட்ட உடல்கள், குருதிக் கறையுடன் கூடிய கணைகள், தங்கள் நிலைகளில் இருந்து தளர்ந்து விழுந்து கிடந்த பல்வேறு பிற பொருட்கள் ஆகியவற்றால் விரவிக் கிடந்த அந்தப் போர்க்களமானது, நட்சத்திரங்கள் சிதறிக்கிடக்கும் ஆகாயத்தைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.
அற்புதம் நிறைந்தவையும், நினைத்துப் பார்க்க முடியாதவையும், மனித சக்திக்கு அப்பாற்பட்டவையுமான அவ்விரு வீரர்களின் சாதனைகளைக் கண்டு சாரணர்களும், சித்தர்களும் மிகவும் ஆச்சரியமடைந்தனர். காற்றைத் தன் கூட்டாளியாகக் கொண்ட சுடர்மிக்கக் காட்டுத் தீயானது (பரந்து கிடக்கும்) உலர்ந்த புற்குவியலின் ஊடாகச் செல்வதைப் போலவே பீமனிடம் சினம் கொண்ட அதிரதன் மகனும் {கர்ணனும்}, அந்தப் போரில் சீற்றத்துடன் திரிந்தான் [2]. அவ்விருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டிருந்தபோது, நாணற்காடுகளை நசுக்கும் இரு யானைகளைப் போல எண்ணற்ற கொடிமரங்களையும், தேர்களையும் வீழ்த்தி, குதிரைகள், மனிதர்கள் மற்றும் யானைகள் ஆகியவற்றைக் கொன்றனர்.(21-27) ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையானது மேகத் திரள்களைப் போலத் தெரிந்தது, மேலும், கர்ணன் மற்றும் பீமனால் அந்தப் போரில் விளைந்த பேரழிவு பெரியதாக இருந்தது" {என்றான் சஞ்சயன்}.
….
தொடரும்..
..
மகாபாரதம் தொடர் முழுவதும் படிக்க இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள்

No comments:

Post a Comment