Tuesday, January 2, 2018

Onakanteswarar temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
________________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற திருக்கோயில் தரிசனம்.*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல
...............)
________________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்:193.*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*

*சிவ தல அருமைகள் பெருமைகள்.*

*ஓணகாந்தேஸ்வரர் திருக்கோவில், திருஓணகாந்தன்தளி.*
_________________________________________
*இறைவன்:*ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், சலேந்தரேஸ்வரர்.

*இறைவி:* காமாட்சி அம்மன்.

*தல விருட்சம்:* வன்னிமரம், புளியமரம்,

*தல தீர்த்தம்:* ஓணகாந்த தீர்த்தம்.

*ஆகமம்:* காமிக ஆகமம்.

*தேவாரம் பாடியவர்கள்:*
சுந்தரர் - ஏழாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம்.

*இருப்பிடம்:*
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மேற்கேயுள்ள சர்வதீர்த்தத்துக்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பஞ்சுப்பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை நிலையத்திற்கு எதிரில் கோவில் உள்ளது.

சாலையோரத்திலேயே கோவிலும் மின் நிலையமும் உள்ளன.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோவில்,
பஞ்சுப்பேட்டை,
(துணை மினநிலையம் அருகில்)
பெரிய காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம்,
PIN - 631 502

*பெயர்க்காரணம்:*
வாணாசுரன் என்ற அரசனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற காரணத்தால் இத்தலம் ஓணகாந்தன்தளி என்று பெயர் பெற்றது.

*கோவில் அமைப்பு:*
ஆலயத்துக்கு முன் வருகையில், மூன்று நிலைகளைத்தாங்கிய இராஜ கோபுரம் காணக் கிடைத்ததும் *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

இந்த ஆலயத்தினுள் மூன்று கருவறைகளும், மூன்று சிவலிங்கங்களும் உள்ளதென முன்னமே தெரிந்து கொண்டிருந்தோம்.

கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தோம்.

நேரே பலிபீடம் இருந்தது. இதனருகாக நின்று, நம்மிடமுள்ள ஆணவமலம் ஒழிய வேண்டி பிரார்த்தித்துக் கொண்டோம்.

அடுத்து, நந்தி மண்டபத்தருகாக நின்று, நந்தியாரை வணங்கிக் கொண்டு, ஈசனைத் தரிசிக்க உள்புக அனுமதி வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.

ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக இருந்தன.

இந்த இரு சந்நிதிகளுக்கும் வந்து கைகளை உயர்த்தி கூப்பி வணங்கிக் கொண்டோம். இந்த இரு விளக்கங்களையும், ஓணனும், காந்தனும் வணங்கிய தாக அங்கிருந்தோர் கூறினார்கள்.

முதல் சந்நிதியில் ஓணேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக எழுந்தருளிந்தார்.

இந்த மூலவரின் பின்புறம் கருவறைச் சுற்றில் சிவன் உமையம்மையின் திருமணக் கோலம் காணக்கிடைத்தது.

ஓணேஸ்வரர் இருக்கும் சந்நிதியின் அர்த்த மண்டபத்தில் சுந்தரரையும் மற்றும் இறைவனின் திருப்பாத தரிசனத்தையும் காணும் அருள் கிடைத்தது. வணங்கி நகர்ந்தோம்.

அடுத்து இரண்டாவது சந்நிதிக்குச் சென்றோம்.  காந்தேஸ்வரர் அருள் தரிசனம் தந்து கொண்டிருந்தார். மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று நகர்ந்தோம்.

மூன்றாவது கருவறையில் சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் எனும் சிவலிங்கத் திருமேனி தனியே சிறு கோவிலாக இருந்தது.

இங்கேயும் கைகளை உயர்த்தி கூப்பி குவித்து ஆராதித்து வணங்கிக் கொண்டோம்.

இது பிற்காலப் பிரதிஷ்டை என்று அங்கிருந்த குருக்கள் நம்மிடம் கூறினார்.

அடுத்து, இத்தலத்திலுள்ள *வயிறுதாரிப் பிள்ளையார்* சந்நிதிக்கு வந்து வணங்கிக் கொண்டோம்.

சம்பந்தர் தனது பதிகத்தின் இரண்டாவது பாடலில் இவரைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.

இது தவிர மற்றொரு விநாகயரான ஓங்கார கணபதியார், காந்தேஸ்வரர் சந்நிதிக்கு வெளியே காட்சி தருகிறார்.

இவருக்கு முன்வந்து, காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் வணங்கிக் கொண்டோம்.

இவரின் சிலையில் பக்தியுடன் காது வைத்துக் கேட்டால் ஓம் என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்பதாக சொல்லப்படுவதை கேட்க நேர்ந்தது. ஆனால் நாம் முனையவில்லை.

தட்சினாமூர்த்தி சனகாதி முனிவர்கள் உடன் இருக்க வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார்.
பவ்யபயத்துடன் வணங்கிக் கொண்டோம்.

அடுத்து, முருகர் தனது மயில் வாகனத்தில் அமர்ந்தபடி தனது இரு தேவியர் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறதை, ஆணந்தமயமாக வணங்கிக் கொண்டோம்.

காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மனே பிரதான அம்பாளாக வீற்றிருப்பதால் இத்தலத்திலுள்ள சிவன் ஆலயங்களில் அம்பாளுக்கு என்று தனி சந்நிதி கிடையாது.

திருஓணகாந்தன்தளி ஆலயத்திலும் அம்பாள் சந்நிதி தனியாக இருக்கப் பெறவில்லை.

*தல அருமை:*
இத்தலத்திற்கு வந்த சுந்தரர், இறைவனிடம் அடிமைத் திறம் பேசி, நெய்யும் பாலும் தயிரும் கொண்டு என்று தொடங்கும் பதிகம் பாடிப் பொன் பெற்றார் என்பது வரலாறு.

இப்பதிகத்தில் ஐந்தாவது பாடலைத் தொடங்கிப் பாடும் போது, இறைவன் பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்து கொண்டாராம்.

இதையறிந்த சுந்தரர் அங்குச் சென்று பதிகத்தை தொடரவே, இறைவன் அப்புளிய மரத்துக் காய்களை உதிர்த்து அக்காய்கள், பொன் காய்களாக விழுமாறு உதிர்த்தாராம்.

சுந்தரர் அவற்றைப் பெற்றார் என்பதாக ஒரு செய்தி இப்பகுதியில் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகிறார்கள்.

*சுந்தரர் தேவாரம்:*
1.🔔நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
நித்தல் பூசனை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
கழல டிதொழு துய்யி னல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட வாடி
ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
ஓண காந்தன் தளியு ளீரே.

🙏🏾திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே, நெய் , பால் , தயிர் முதலியவற்றால் உம்மை நாள்தோறும் வழிபடுவாரது கையில்காசு ஒன்றும் காணப்படுகின்ற தில்லை.  அவ்வாறே, உமது கழலணிந்த பாதத்தைக் கும்பிட்டு ஏதேனும் பெற்றாலன்றி இவ்வுலகத்தில், புலன்களாகிய ஐவர் தண்டலாளர் ஐந்து பக்கம் பற்றி ஈர்த்துச் சுழற்றச் சுழன்று, அச்சுழற்சி யாலாகிய துன்பம் என்னும் ஆழ்ந்த குழியில் அகப்பட்டு ஏறமாட்டாது அழுந்திப் போவேனாகிய அடியேனுக்கு , அதனினின்றும் கரையேறும் வழியொன்றனைச் சொல்லியருளீர் .

2.🔔திங்கள் தங்கு சடையின் மேலோர்
திரைகள் வந்து புரள வீசும்
கங்கை யாளேல் வாய்தி றவாள்
கணப தியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவி யார்கோற் றட்டி யாளார்
உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
ஓண காந்தன் தளியு ளீரே.

🙏🏾திருவோணகாந்தன்தளி என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே,  பிறை தங்குமாறு சேர்த்துக் கட்டியுள்ள உமது சடையின் மேலும், ஒப்பற்ற அலைகள் தோன்றிப் புரளுமாறு வீசுகின்ற , கங்கை என்னும் தேவியோவெனில், உமது பக்கத்தில் எஞ் ஞான்றும் உள்ள உமாதேவியார்க்கு அஞ்சி ஒருஞான்றும் வாய் திறத்தலே இல்லை. உம் மூத்த மகனாகிய விநாயகனோவெனில் , வயிறு ஒன்றையே முதன்மையாக உடையவன். ( பிறிதொன்றையும் அறியான் ). இளைய மகனாகிய, அகங்கையில் வேற்படையை யுடைய முருகனோவெனில், விளையாட்டுப் பிள்ளை ; ( யாதொன்றையும் பேணான் ). தேவியாராகிய உமையம்மையாரோவெனில், உம்மை ஒழிந்து அடியவரை ஆளுவாரல்லர். ( நீரோ அடியவர் குறை நோக்கி யாதும் செய்யீர் ) ஆதலின் , உம் குடிக்கு யாங்கள் அடிமை செய்ய மாட்டேமாகின்றேம் .

3.🔔பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
பேணி உம்கழல் ஏத்து வார்கள்
மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி
மதியு டையவர் செய்கை செய்யீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
ஆவற் காலத் தடிகேள் உம்மை
ஒற்றி வைத்திங் குண்ண லாமோ
ஓண காந்தன் தளியு ளீரே.

🙏🏾தலைவரே, திருவோணகாந்தன்தளி என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே, உம்மால் யாதானும் ஒன்றை அடையினும், அடையாதொழியினும் அவ்வாற்றான் வேறுபடுதல் இன்றி எஞ்ஞான்றும் ஒருபெற்றியே உம் திருவடியைப் பற்றிநின்று துதிக்கும் அடியவர், நம்மையன்றி வேறொரு துணையும் இல்லாதவர், என்று நினைத்து, அறிவுடையவர்க்கு உரிய செய்கை ஒன்றும் நீர் செய்கின்றிலீர். அதனால், உம் அடியவர் தங்கள் கையிற் பொருள் இல்லாதொழிந்த காலத்தும், அது காரணமாக வழியொன்றும் காணாது அலைந்த காலத்தும் உம்மைப் பிறருக்கு ஒற்றியாகவைத்துப் பிழைத்தல்தான் செயற்பாலதோ ? சொல்லீர் 

4.🔔வல்ல தெல்லாம் சொல்லி உம்மை
வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்
றில்லை என்னீர் உண்டும் என்னீர்
எம்மை ஆள்வான் இருப்ப தென்நீர்
பல்லை உக்க படுத லையிற்
பகல்எ லாம்போய்ப் பலிதி ரிந்திங்
கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
ஓண காந்தன் தளியு ளீரே.

🙏🏾திருவோணகாந்தன்தளி என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே, யாம் வல்ல கருத்துக்கள் பலவும் சொல்லி உம்மை வாழ்த்தியபோதும், நீர் வாய்திறந்து, எமக்கு ஈய யாதேனும் ஒருபொருளை, இல்லை என்றும் சொல்கின்றிலீர். உண்டு  என்றும் சொல்கின்றிலீர். நீர் எம்மைப் பணிகொள்ள இருத்தல் எவ்வாறு? நாள் தோறும் சென்று, பல் நீங்கிய  இறந்தாரது தலையில் இவ்வுலகில் பிச்சை ஏற்கத் திரிந்தும் , இல்வாழ்க்கையை விரைவில் விட்டொழிய மாட்டீர்.

5.🔔கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
கொண்ட பாணி குறைப டாமே
ஆடிப் பாடி அழுது நெக்கங்
கன்பு டையவர்க் கின்பம் ஓரீர்
தேடித் தேடித் திரிந்தெய்த் தாலும்
சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்
ஓண காந்தன் தளியு ளீரே.

🙏🏾திருவோணகாந்தன்தளி என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே, நீர் தம்மிற் பலகாலும் கூடி, அடியவர்க்கு உரிய, பொருந்திய தாளத்தொடுபட்ட பாட்டுக்களைக் குற்றம் உண்டாகாமலே பாடியும், ஆடியும், மனம்நெகிழ்ந்து அழுதும், மற்றும் அவ்வாற்றால் அன்புடையராய் இருப்பவர்க்கு நன்மை செய்யு மாற்றினை நினைக்கின்றிலீர். உம்மைக் காண வந்து பலவிடத்திலும் தேடித் தேடித் திரிந்தாலும், என்னிடத்தில் இரக்கம் வைத்துக் காட்சி யளிக்கமாட்டீர். கோயிலைவிட்டுப் போகவும் மாட்டீர். கோயிலில் வந்து பாடுகின்ற எனக்குப் பற்றுக்கோடும் தரமாட்டீர். என் செய்வேன்!

6.🔔வாரி ருங்குழல் வாள்நெ டுங்கண்
மலைம கள்மது விம்மு கொன்றைத்
தாரி ருந்தட மார்பு நீங்காத்
தைய லாள்உல குய்ய வைத்த
காரி ரும்பொழிற் கச்சி மூதூர்க்
காமக் கோட்டம்உண் டாக நீர்போய்
ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே
ஓண காந்தன் தளியு ளீரே.

🙏🏾திருவோணகாந்தன்தளி என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே. தேன் ததும்புங்கொன்றை மாலையை உடைய உமது பெரிய அகன்ற மார்பினின்றும் நீங்காத, நீண்ட கரிய கூந்தலையும், வாள்போலும் நெடிய கண்களையும் உடைய மலைமகளாகிய தேவியே. உலக மெல்லாம் துன்பமின்றி வாழ்தற் பொருட்டு வைத்துள்ள சிறந்த அறச்சாலையாகிய, மேகம் தவழும் பெரிய சோலையை யுடைய, கச்சி  என்னும் பழைய ஊரின்கண் உள்ள திருக்காமக் கோட்டம் இருக்க, நீர் சென்று, ஊரவர் இடும் பிச்சையை ஏற்பது ஏன்?

7.🔔பொய்ம்மை யாலே போது போக்கிப்
புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்
மேலை நாள்ஒன் றிடவுங் கில்லீர்
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்
ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர்
உம்மை யன்றே எம்பெரு மான்
ஓண காந்தன் தளியு ளீரே.

🙏🏾திருவோணகாந்தன்தளி என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே. நீர் பொய்ச்சொல்லினாலே காலங் கழித்து, திருக்கோயிலின் புறத்தும் காணப்படீர். அகத்தும் காணப்படீர்.  ஆகவே நீர் நும் அடியவரை மெய்சொல்லி ஆளமாட்டீர்போலும்! இனி, பின்வரும் நாள்களிலும் ஒன்றும் தரமாட்டீரேயாம். ஏனெனில், எம்மை ஆளாகப் பெறுமளவும் விடாது வழக்காடுதல் அல்லது, பெற்றுவிட்டால் பின்பு எம்பால் ஒரு பணியையும் விரும்புகின்றிலீர். எவ்வாற்றான் நோக்கினும், நீர் எமக்கு யாதும் ஈகின்றவராயோ, யாதும் சொல்கின்றவராயோ தோன்றவில்லை. இந்நிலையில் நீர் எமக்குத் தலைவராய் இருத்தல், இப்பிறப்பு வந்தபின்னன்று. முற் பிறப்புத் தொட்டேயாம்.

 8.🔔வலையம் வைத்த கூற்ற மீவான்
வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
சிலைஅ மைத்த சிந்தை யாலே
திருவ டீதொழு துய்யின் அல்லால்
கலைஅ மைத்த காமச் செற்றக்
குரோத லோப மதவ ரூடை
உலைஅ மைத்திங் கொன்ற மாட்டேன்
ஓண காந்தன் தளியு ளீரே.

🙏🏾திருவோணகாந்தன்தளி என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே, எத்தகையோரையும் கொண்டு செல்ல, பாசத்தைக் கையிலே கொண்டுள்ள கூற்றுவன் வந்து வானத்தின்மேல் நின்ற செய்தியைக்கேட்டு, அடியேன், நீர் கற்போல அமைத்துத் தந்த அம் மனத்தைக் கொண்டே உமது திருவடியைத் தொழுது அக்கூற்றுவனுக்குத் தப்ப நினைக்கின்றேனேயன்றி, விதி அமைத்துத் தந்த ஐம் பொறிகளாகிய ஐந்து உலைக்களக் கூட்டத்தைப் பொருளாக உள்ளத் தமைத்து, காமம், மாற்சரியம், குரோதம், உலோபம், மதம் என்ப வரிடைப் பொருந்தி வாழ நினைக்கின்றிலேன்.

9.🔔வார மாகித் திருவ டிக்குப்
பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே
ஆரம் பாம்பு வாழ்வ தாரூர்
ஒற்றி யூரேல் உம்ம தன்று
தார மாகக் கங்கை யாளைச்
சடையில் வைத்த அடிகேள் உந்தம்
ஊரும் காடு உடையும் தோலே
ஓண காந்தன் தளியு ளீரே.

🙏🏾திருவோணகாந்தன்தளி என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே,  கங்கை என்பவளைத்தாரமாகக் கொண்டு, இடமின்றிச் சடையில் வைத்துள்ள அடிகளே, நீர் மார்பில் அணியும் ஆரமாவது பாம்பு வாழும் ஊர் உமக்கு உரிமையில்லாதது. ஒற்றியூர் உளதே எனில் ஒற்றியெனவே, அஃது உம்முடையது அன்றாயிற்று. உமக்கு இல்லமாவது சுடுகாடு. உமது உடையாவது தோல்  இங்ஙன மாதலின் , உம்மிடத்து அன்புடையவராய் உம்திருவடிக்குத் தொண்டு செய்யும் அடியவர் உம்மிடத்தினின்றும் பெறுவது எதனை?

10.🔔ஓவ ணம்மேல் எருதொன் றேறும்
ஓண காந்தன் தளியு ளார்தாம்
ஆவ ணஞ்செய் தாளுங் கொண்ட
வரைது கில்லொடு பட்டு வீக்கிக்
கோவ ணம்மேற் கொண்ட வேடம்
கோவை யாகஆ ரூரன் சொன்ன
பாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப்
பறையுந் தாஞ்செய்த பாவந் தானே.

🙏🏾நீக்கப்படும் தன்மையை ஏற்றுள்ள ஒற்றை எருதை ஊர்தியாகக் கொள்ளும், திருவோணகாந்தன்தளியில் வாழ்கின்ற இறைவர், நம்பியாரூரனை, தாமே பத்திரம் எழுதிக் கொண்டுவந்து ஆட்கொண்ட எல்லைக்கண், துகிலும் பட்டும் உடுத்திருந்து, பின்பு அவர் ஆணைவழியே அவரை அவன் அணுகிப் பாடுதலாகிய தொண்டினைச் செய்யும் எல்லைக் கண் கோவண மட்டிலே உடையவராய் நின்ற கோலத்தின் தன்மைகள் பலவும் நிரல்படத் தோன்றுமாறு அமைத்து அவன்பாடிய,
பா வடிவாகிய இத் தமிழ்ச் செய்யுள்கள் பத்தினையும் பொருளுணர்ந்து அன்பு மீதூரப் பண்ணொடு நன்கு பாடவல்லவர்க்கு அவர் செய்த பாவம் விரைந்து நீங்கும்.

         திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*
மகாசிவராத்திரி,
ஐப்பசி பௌர்ணமி பிரதோஷம்,
தமிழ் மாதப்பிறப்பு,
வருடாந்திர விசேஷ தினங்கள்.

*தொடர்புக்கு:*
98944 43108

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு **
__________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment