Thursday, November 26, 2020

Where and all to go in Chennai?

சென்னைவாசிகளே, இங்கெல்லாம் செல்லுங்கள் J K SIVAN 

இது நடந்து பத்து வருஷம் ஆயிற்று......
2010 வருஷம் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி அன்று என்ன கிழமை என்று கேட்டால் உடனே பதில் தெரியுமா? எனக்கும் தெரியாது. ஆனால் என்னுடைய நீல கலர் பழைய டயரி சொல்லியது அன்று வியாழக்கிழமை என்று. என்ன விசேஷ அன்று . அன்றும் மழை இல்லை. பதினைந்து முதியவர்கள் என்னை சுற்றி நின்றனர். நாங்கள் காத்துக்கொண்டிருந்த சிட்டி ரைடர் மினி பஸ் வண்டி சொல்லி வைத்தாற் போல் காலை 5.30மணிக்கு வந்து விட்டது.  
எங்களை எங்கெல்லாம் கொண்டு சென்றது என்பது தான் இந்த கட்டுரை விஷயம் . பள்ளிக்கரணையில் ஒரு சமீப காலத்தில் கட்டிய வெங்கடாசலபதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பெருமாளின் உருவத்திலேயே தாயாரும் காட்சி தருகிறாள். மிகவும் நேர்த்தியாக உள்ள இந்த கோயிலில் இன்னும் மற்ற சந்நிதிகளை கட்டி கொண்டு இருந்தார்கள். போகும் வழியை விசாரித்து கொண்டு தான் போகவேண்டும். மற்றுமொரு கோயில் அன்னை ஆதிபராசக்தி, தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் மந்திர பாவை சந்நிதியும் அங்கு உண்டு. சித்தர்களால் உருவாக்கப்பட்ட இந்த மந்திரப் பாவை, கொல்லி பாவை போலவே ஒரு சக்தி வாய்ந்த தெய்வம். தீய சக்திகளை அழிப்பவள். இந்த கோயில் பள்ளிகரணை புகழேந்தி தெருவில் உள்ளது. மிக விஸ்தாரமாக உள்ளது. 
அடுத்ததாக நாங்கள் சென்றது தாம்பரத்தில் உள்ள ஸ்கந்தாஸ்ரமம். எத்தனை நேரம் வேண்டுமானாலும் இந்த கோயிலில் இருந்தாலும் வெளியே செல்ல எவருக்கும் மனம் வராது. அழகான சிலா ரூபங்களில் விக்ரகங்கள் பெரிது பெரிதாக வடிக்கப் பட்டவை . சகஸ்ர லிங்கத்தின் பிரம்மாண்ட உருவத்தை சொல்வதா, புவனேஸ்வரியின் அருள் பொங்கும் முக அழகை வர்ணிப்பதா, சுவாமிநாதன் திருக்கோலத்தை விவரிப்பதா, சரபேஸ்வரர்- ப்ரத்யங்கிரா அம்பாளின் உக்ரத்தையும் தேஜஸையும் வர்ணிப்பதா, வார்த்தைகளில் உச்சரிக்கமுடியாத திவ்ய ஸ்வரூபதுடன் விளங்கும் ஐயப்பனையும், பஞ்சமுக விநாயகரையும், சுதர்சன/நரசிம்ஹரையும் எவ்வாறு என்னால் எடுத்துச் சொல்ல முடியும்.? ஆகவே சிறந்த வழி எதுவென்றால், நீங்களே நேரில் சென்று தரிசித்து அனுபவித்து மகிழ்வது தான். காலை 8.30-9மணியாகிவிட்டது. அங்கேயே சாப்பிட கை கழுவ வசதி இருந்தது. எடுத்து சென்ற இட்டலியை மிளகாய் பொடியோடு சுகமாக விழுங்கிவிட்டு காபியை தேடி புறப்பட்டு விட்டோம். 
தாம்பரத்தின் அருகிலேயே மாடம்பக்கம் இருக்கிறது. 1 8 சித்தர்களின் கோயில் மிக நன்றாய் அமைந்துள்ளது. சேஷாத்ரி சுவாமிகளின் அதிஷ்டானம் விசேஷம். பச்சை கல்லிலான மேரு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. நாங்கள் சென்ற நேரம் ஆடிப் பூர பூஜைகள் விமரிசையாக அனேக சுமங் கலிகளுடன் விளக்கு பூஜையோடு ஜக ஜோதியாக நடந்துகொண்டிருந்தது. 
இதை ஒட்டியே தேனுபுரிஸ்வரர் ஆலயமும் உள்ளது. பழைய கால கோவில். சிவனையும் அம்பாளையும் தரிசனம் செய்து விட்டு அடுத்ததாக செம்பாக்கம் அருகில் உள்ளது என்று கேட்டு தெரிந்துகொண்டு மிக தொன்மையான இந்த ஆலயம் சென்றோம். வட திருவானைக்கா என்று புகழ் பெற்றது. அங்கே போலவே இங்கும் சிவபெருமான் ஜம்புகேஸ்வரர். அம்பாள் அகிலாண்டேஸ்வரி. அபிஷேகம் நடைபெற்றுகொண்டிருந்தது. அன்றைய உபயதாரருக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். என் தமையனார் ரத்னமய்யர் பஜனை திலகம் பாலக்ரிஷ்ணனுடன் ஒரு சில பஜனைப் பாடல்களை பாடி அங்கிருந்தவர்களை திக்கு முக்காட வைத்த பிறகு அடுத்த கோயிலுக்கு புறப்பட்டோம். 
மகாபலிபுரம் செல்லும் வழியில் இஞ்சம்பாக்கதில் உள்ள மிகபெரிய ஷீரடி சாய் பாபா கோயில் எல்லோரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய ஆலயம். மிக அழகிய வேலைப்பாடுடன் கட்தீயவர்கள் சோழர்கள் அல்ல. நம்மவர்கள். சாய் சமஸ்தானத்தில் தன்னை மறக்காதவர்கள் வெகு சிலராகத்தான் இருப்பார்கள் என்று தோன்றும் அளவு கூட்டம் ஓஹோ வியாழக்கிழமை என்பது மறந்து போய்விட்டதே.
அந்த பக்கத்திலேயே கொஞ்சம் தொடர்ந்து பிரயாணம் செய்தால் கானாத்தூர் வரும். யாரோ பூரியிலிருந்து ஜகந்நாதர் ஆலயத்தை அப்படியே பெயர்த்து இங்கே கொண்டு வைத்திருக்கிறார்கள். பீனியல் ஒரிசா அல்லது ஒடிஷா போகவே வேண்டாம். நேரம் காசு செலவாகும். இங்கேயே பூரி ஜகந்நாதர் காத்துக் கொண்டிருக்கிறார். தனியாக அல்ல. அண்ணா பலராமனுடனும் சகோதரி சுபத்ரையுடனும் தான். ஒரிஸ்ஸா அர்ச்சகர் உச்சரிப்பு காதுக்கு இனிமை. அப்போது உச்சி கால பூஜை நடந்து கொண்டிருந் தது. ஒரியா கலந்த சமஸ்க்ரித மந்திர உச்சரிப்பு புதிதாக வித்யாசமாக காதில் விழுந்தது குழந்தைகளின் மழலை மொழி மாதிரி ஒரு இனிமை. மகாலட்சுமி சன்னிதி அற்புதம். தரிசனம் செய்துகொண்டு அண்ணாந்து பாருங்கள். பூரி ஜெகநாத சுவாமி கோயிலின் கோபுர தர்சனம். மிகவும் அருமையான மறக்கமுடியாத தரிசனம். 
அப்போது இஸ்கான் கிருஷ்ணன் கோயில் முழுமையாக கட்டப்படவில்லை. அமெரிக்க பக்தர்களின் ஆர்த்தியை பார்க்க நேரமில்லாததால் புறப்பட்டு விட்டோம். சுடசுட பாயசமோ சர்க்கரை பொங்கலோ கொடுத்தார்கள். 
திருப்போரூர் முருகன் கோயில் மூடபட்டிருந்தால் அருகாமையிலிருந்த சிறிய குன்றில் இருக்கும் அம்மனை மட்டும் தரிசித்துவிட்டு அங்கேயே குதிரை சிலையின் கீழே உள்ள மண்டபத்தில் மரநிழலில் மதிய உணவை முடித்துகொண்டோம். உண்ட களைப்பில் அனைவரும் அந்த குட்டி மலையில் வீசிய சுகமான காற்றில், கொண்டு சென்ற புளியோதரை, தயிர் சாதம் வயிற்றில் நிரம்பி கொடுத்த சந்தோஷத்தில், சில நிமிடங்கள் இளைப்பாறினோம். புளியோதரைக்கும் குட்டி தூக்கத்துக்கு நெருங்கிய சம்பந்தம் ஏன் என்று இதுவாரபாய் எவருமே எதற்காக ஆராய்ச்சி செய்யவில்லை?  
மாலை முருகன் சந்நிதி திறந்தவுடன் முருகனை தரிசித்து விட்டு திருப்போரூர் செங்கல்பட்டு சாலையில் குலுங்கி கொண்டே சென்றோம். வழியில் ஒரு அழகிய சிவன் கோயில் (புராதனமானது) செம்பாக்கம் என்ற ஊரில் உள்ளது. இங்கும் இறைவன் பெயர் ஜம்புகேஸ்வரர் தான். ; அம்பாள் அழகாக காட்சி தருகிறாள். மிக பொருத்தமான பெயர் அவளுக்கு " அழகாம்பிகை" . எத்தனை பேருக்கு இந்த கோயில் தெரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறது. கண்டிப்பாக தரிசனம் செய்ய வேண்டிய கோயில் இது. செல்லவே மனமில்லாமல் கிளம்பி அடுத்ததாக சிறிது நேரத்தில் மற்றொரு ஊருக்கு சென்றோம். அதன பெயர் முள்ளிபாக்கம் என்கிற ஸ்தலம். வழியில் முள் இருந்தது. இங்கு பிரம்மாண்டமாக சிவன் தரிசனம் தருகிறார். பெறுவதற்கு தான் எவரும் இல்லை. நாங்கள் சென்ற நேரம் பூஜை செய்ய அர்ச்சகர் இல்லை. என் அண்ணா ரத்னமய்யர் இருக்கையில் என்ன கவலை? . ஸ்லோகத்துடன் இனிய குரலில் ஒரு சிறு நாமாவளி. ஓயாமல் பாடி மகிழ்த்தும் நங்கநல்லூர் பஜனை திலகம் பாலக்ரிஷ்ணனின் இனிய குரல் இங்கும் ஒலித்தது. இறைவனின் ஆசியுடன் மனதை அங்கேயே விட்டு விட்டு புறப்பட்டோம். வழியில் காபி உள்ளே சென்ற தெம்பில் அடுத்ததாக எங்கள் வண்டி நின்றது திரு இடைசுரம் என்று பாடல் பெற்ற ஸ்தலமாக இருந்தாலும் தற்போதுள்ள பெயர் திரு இடை சூலம். 
யாராவது இந்த ஸ்தலம் பற்றி ஒரு நல்ல கதையை இதற்கு காரணமாக வைத்திருக்கலாம். எனக்கு தேடவோ தெரிந்துகொள்ள நேரமோ இல்லை. ஒருநாள் கண்டுபிடிக்க வேண்டும். இந்த கோயிலின் வாசலில் இரு தூண்களில் பிள்ளையாரும் முருகனும் அழகாக வரவேற்றார்கள். வெகு அருகாமையிலேயே திருவேற் காடு அம்மன் ஐம்பது அடி உயரத்தில் நாகம் படமெடுத்து குடையாக, ஒரு கால் மடித்து அபய ஹஸ்தத்துடன் புன்னகை புரிந்து அருள் பாலிக்கிறாள். இருள் நெருங்கிவிட்டது. நேரம் சென்று விட்டது. விளக்கில்லாத காட்டுப் பாதை மாதிரி ஒரு வழியில் சிங்கபெருமாள் கோயிலுக்கு குறுக்கு வழியில் செல்வதாக சொல்லி எங்களை சிறிது நேரம் ஆட்டி அலைய விட்டு சிடி ரைடர் திரும்ப நங்கநல்லூர் அடைந்தபோது இரவு ஒன்பது மணி. குட் நைட் சொல்லி பிரிந்தோமே தவிர அந்த நாள் நிச்சயமாக ஒரு குட் டே . GOOD DAY


No comments:

Post a Comment